மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றிவரும் இலங்கையர்கள் மூலம் 2014 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 33,517 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணி நாட்டுக்குக் கிடைத்திருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் 6 இலட்சத்து 37 ஆயிரத்து 534 இலங்கையர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வாய்மூல விடைக்காக கனக ஹேரத் எம்.பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பிரதியமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து பணியாளர்களாகச் சென்றவர்களில் சவூதி அரேபியாவில் 161,947 பேரும் , தென்கொரியாவில் 23,774 பேரும், பஹ்றேனில் 12,928 பேரும், சைப்ரசில் 4,885 பேரும், கட்டாரில் 1,17,732 பேரும், இஸ்ரேலில் 6,500 பேரும், குவைத்தில் 89,183 பேரும், ஐக்கிய அரபு இராஜியத்தில் 1,50,000 பேரும் , ஜகார்த்தாவில் 9,676 பேரும், லெபனானில் 11,500 பேரும், ஓமானில் 21,409 பேரும், மலேசியாவில் 6,000 பேரும், மாலைதீவில் 15,000 பேரும், சிங்கப்பூரில் 7,000 பேரும் தொழில் புரிகின்றனர். இவர்கள் மூலம் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் வரை 33,517.7 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளது. இவர்கள் நாட்டுக்கு அனுப்பிய பணத்துக்கு எந்தவித வரியும் அறவிடப்படவில்லை என்றார்.
வீட்டுப் பணியாளர்களாக மத்தியகிழக்கு நாடுகளுக்குப் பெண்களை அனுப்பும் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதேபோல் அனுபவம் மிக்க நபர்களை அனுப்புகின்றோம், அனுபவம் இல்லாத எந்த நபர்களையும் நாம் அனுப்புவதில்லை.
மத்திய கிழக்கை இலக்கு வைத்து முன்னெடுத்த இந்த வேலைத்திட்டத்தை இப்போது வேறு நாடுகளுக்கும் அனுப்பும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதில் எமக்கு பாரிய சாதகத்தன்மைகள் கிடைத்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.
தினகரன்
No comments:
Post a Comment