இந்திய அரசின் நிதி உதவியுடன் ‘1990’ எனும் அவசர அம்புலன்ஸ் வண்டிச் சேவை கடந்த யூலை மாதம் 21 ஆம் திகதி வட மாகாண ரீதியில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வட மாகாணத்திற்கு வழங்கப்பட்ட 20 அம்புலன்ஸ் வண்டிகளில் மன்னார் மாவட்டத்திற்கு என 3 அம்புலன்ஸ் வண்டிகள் கையளிக்கப்பட்டன.
குறித்த அம்புலன்ஸ் வண்டிகள் மன்னார் மாவட்டத்தில் மன்னார், மாந்தை மேற்கு மற்றும் முசலி ஆகிய 3 பிரதேச செயலாளர் பிரிவுகளில் தமது சேவைகளை ஆரம்பித்துள்ளன.
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்கான அம்புலன்ஸ் வண்டி மன்னார் பொலிஸ் நிலையத்திலும், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கான அம்புலன்ஸ் வண்டி இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்திலும், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கான அம்புலன்ஸ் வண்டி சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் இருந்தும் தமது சேவைகளை மேற்கொண்டு வருகின்றன.
எனினும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்ற மடு பிரதேச செயலாளர் பிரிவில் குறித்த அம்புலன்ஸ் வண்டி சேவை ஆரம்பிக்கப்படாமை தொடர்பில் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மடு பிரதேச செயலாளர் பிரிவில் மக்கள் பல்வேறு விதமாக பாதிப்படைகின்ற போதும், அவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல அம்புலன்ஸ் வண்டி இல்லாத நிலை காணப்படுகின்றது. இதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
எனவே மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்களின் நலனை கருத்தில் கொண்டு மன்னாருக்கு வழங்கப்பட்ட அம்புலன்ஸ் வண்டிகளில் ஒன்றை மடு பிரதேச செயலாளர் பிரிவில் வைத்து சேவையினை மேற்கொள்ள அதிகாரிகள் முன் வர வேண்டும் என மடு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment