தயாரிப்பு, கட்டிட நிர்மாணம், கடற்றொழில் ஆகிய துறைகளில் தொழில்வாய்ப்புக்கு தென்கொரியாவில் ஆகக்கூடிய கோரிக்கை நிலவுவதாக அந்நாட்டு மனித வள அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் க்வக் ஹங்ஜோ தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் இன்று (31) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், இலங்கையைச் சேர்ந்த 25 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தென்கொரியாவில் சட்ட ரீதியான தொழில் வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளனர். 1 இலட்சத்து 50 ஆயிரம் அல்லது அதிலும் பார்க்கக் கூடிய தொகையை இவர்கள் சம்பளமாகப் பெறுகின்றனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தென்கொரியாவுக்கான விஜயம் இந்த நிலையை மேலும் விரிவுபடுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார். கொரிய மொழிப் பரீட்சையில் சித்தியடைந்த இலங்கையர்கள் அந்நாட்டு நிறுவனங்களின் தேவையின் அடிப்படையில் தொழில்வாய்ப்பிற்காக இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.
இவர்களுக்கு ஆகக்கூடிய சம்பளத்திற்கு மேலதிகமாக பல வசதிகள் கிடைக்கின்றன. இலங்கையின் நுகர்வோர் கொடுப்பனவுக்கு சமமான கொடுப்பனவ இந்த நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. சேவைக்காலம் நிறைவடைந்த பின்னர் ஒரு வருடத்திற்கு ஒரு மாத கால சம்பளம் என்ற அடிப்படையில் பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த சிறப்பு உரிமைகளையும் பெற்றுக் கொள்வதற்கு கொரியாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பில் தெளிவில்லாமையால் சிறப்புரிமைகளை பெறாத 400ற்கு மேற்பட்டோர் இலங்கையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இவர்களால் இதனை தற்போது பெற்றுக் கௌ;ள முடியும். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் இணையத்தளம் அல்லது கொரிய மனித வள அபிவிருத்திப் பிரிவில் விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
கொரியாவில் சேவையாற்றக்கூடிய ஆகக்கூடிய காலம் 4 வருடம் 10 மாதங்களாகும். இந்த கால எல்லை முடிவடைந்த பின்னர், 3 வருட காலம் இலங்கையில் நாட்களை கழிப்பதன் மூலம் நிறுவனம் விரும்பும் பட்சத்தில் மீண்டும் அங்கு பணியாற்ற முடியும்.
No comments:
Post a Comment