சவூதி அரேபியா றியாதிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த முக்கிய பிரமுகர்கள் சிலர் அல்-கிம்மா நிறுவனத்திற்கு விஜயம் செய்தனர். இதன் போது நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ்.ஹாறூன் ஸஹ்வி சில முக்கிய தேவைகள் குறித்து பிரமுகர்களுடன் கலந்துரையாடினார்.
பிரதேச மட்டத்தில் பொது நீச்சல் தடாகங்களை அமைத்து இளைஞர்களுக்கு நீச்சல் பயிற்சியளித்தல், அதன் மூலம் நீரில் மூழ்கி மரணிப்பதிலிருந்தும் எமது இளைஞர்களைப் பாதுகாப்பதோடு, போதைவஸ்த்துப் பாவனையிலிருந்தும் விடுவித்தல்.
மேலும் சீதனக்கொடுமையிலிருந்து எமது சமூகத்தை மீட்டெடுக்க இலவச வீட்டுத்திட்டங்களைச்செய்து கொடுத்தல் போன்ற பல முக்கிய வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு, அவற்றுக்கான மதிப்பீட்டு அறிக்கைகைகளும் சமர்ப்பிக்கப்பட்டன.
மட்டக்களப்பு ஜெயந்தியாய பல்கலைக்கழகத்திற்கும் அவர்கள் விஜயஞ்செய்து நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினர்.
அதன் போது எமது இலங்கைத் திருநாட்டில் சீனி, இரும்பு, ஆடைத்தொழிற்சாலைகளை அமைத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இலங்கை அரசு வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவேற்பதாகவும், அதிலும் இவ்வாறான தொழிற்சாலைகள் கிழக்கு மாகாணத்தில் அமையப்பெறும் பட்சத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பதாலும் தனது முழுமையான ஒத்துழைப்பு மற்றும் ஆதரவையும் வழங்குவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
விரைவில் இதற்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடுவதாகவும் அதற்கான அடுத்த கட்ட சந்திப்பை எதிர்வரும் மாதமளவில் செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் பிரமுகர்கள் கருத்துத்தெரிவித்தனர்.
முஹம்மது அனீஸ் & எம்.ஐ. அஸ்பாக்
No comments:
Post a Comment