பட்டப் பின்படிப்பு மற்றும் ஆய்வுகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்று மீள நாடு திரும்பாத பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 486 பேரினது விபரங்களைப் பகிரங்கமாக வெளியிடவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
இவ்வாறு வெளிநாடு சென்றுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடமிருந்து இதுவரை 813 மில்லியன் ரூபாய் அறவிடவேண்டியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நடைமுறையிலுள்ள சம்பந்தப்பட்ட சட்டங்களுக்கமைய இந்த அறவீடு மேற்கொள்ளப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, "இதுவரை எமது பல்லைக்கழகங்களில் புலமைப் பரிசில்களைப் பெற்றுக்கொண்டு உயர்கல்விக்காக 486 பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வெளிநாடு சென்று மீளத் திரும்பாதுள்ளனர். இதனால் மேற்படி தொகை எமது பல்லைக்கழகங்களுக்கு உரித்தானது.
இதற்கிணங்க இதுவரை 813 மில்லியன் ரூபாய் அவர்களிடமிருந்து அறவிடவேண்டியுள்ளது. இது தொடர்பில் சில விரிவுரையாளர்கள் மற்றும் அவர்களின் சாட்சிகளாகக் கையொப்பமிட்டுள்ள சிலருக்கு எதிராக தற்போது வழக்கு தொடரப்படவுள்ளது. இது தொடர்பில் பணிப்புரைகள் வழங்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உயர் படிப்பிற்காக வெளிநாடு செல்வது தொடர்பில் பல்கலைக்கழகங்களில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் விரிவுரையாளர்கள் இவ்வாறு நடந்துகொள்வதால் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.
எதிர்காலத்தில் நாட்டு மக்களது நிதியில் இவ்வாறு வெளிநாடு செல்பவர்களைப் பதிவு செய்வதற்கு விஷேட பிரிவு ஒன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் உருவாக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment