நாட்டிலுள்ள எந்த இன மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்தே மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என பிரதியமைச்சர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார். மேலும் அரசாங்கம் தேர்தலை நடத்துவதற்கு எப்போதும் அஞ்சியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் ஒருபோதும் அஞ்சவில்லை. ஆனால், மஹிந்தவே தனது தேவைக்காகவும் விருப்பத்துக்காகவும் இந்த நாட்டில் தேர்தலை நடத்திய ஒருவராவார்.
தற்போது அதே செயற்பாட்டை நாமும் மேற்கொள்வோம் என அவர் சார்புத் தரப்பினர் எதிர்பார்க்கிறார்கள். எனினும் எம்மால் அவர்கள் நினைத்ததுபோல உடனடியாக தேர்தலை நடத்திவிட முடியாது.
1987 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டுவரை இதுவரை வெறும் 5 வருடங்களுக்கு மட்டும்தான் தேர்தலே இல்லாமல் இருந்துள்ளது. உண்மையில், தேர்தல் ஒன்று நாட்டில் நடைபெறும்போது நாட்டின் அபிவிருத்தி உள்ளிட்ட ஒட்டுமொத்த செயற்பாடும் முடங்கிவிடும்.
நாடாளுமன்றம் கூட ஏதேனும் விசேட தேவைகளுக்காத்தான் கூடும். இதேநிலைதான் உள்ளுராட்சி சபைகளிலும் இடம்பெறுகின்றன. இவ்வாறு நாடே ஸ்தம்பித்துவிடும்.
அத்தோடு, தேர்தலை நடத்த வேண்டுமெனில் எந்தத் தரப்பினருக்கும் பாதிக்காத தேர்தல் முறைமையொன்றை அறிமுகப்படுத்தியே நடத்த வேண்டும்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலின்போது நாம் புதிய தேர்தல்முறையை அறிமுகப்படுத்தினோம். ஆனால், இதனால் பாதிப்பு என்றவுடன் இதனை தற்போது எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
எனவே இவற்றை நிவர்த்தி செய்த பிறகுதான் தேர்தலை நடத்தமுடியும். இதற்காகவே காலதாமதம் ஏற்படுகிறது’ என குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment