ஆலயத் தேர்த் திருவிழாவுக்குச் செல்வதற்குச் சேலை வாங்கித் தராத காரணத்தால் மனமுடைந்த 18 வயதான மாணவியொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் யாழ். கொடிகாமம், எருவன் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ். வரணி சிட்டிவேரம் கண்ணகை அம்பாள் ஆலயத் தேர்த் திருவிழா நேற்று முன்தினம் (10) சனிக்கிழமை முற்பகல் இடம்பெற்றது. இந்நிலையில் தனது பாடசாலைத் தோழிகள் சேலைகள் அணிந்து ஆலயத்திற்கு வருகை தருவார்கள் என்பதால் நானும் சேலையணிந்தே ஆலயத்திற்குச் செல்ல வேண்டுமெனக் குறித்த மாணவி தாயாரிடம் விடாப்பிடியாக நின்றுள்ளார். ஆனால், தாயார் குடும்பநிலை காரணமாகக் குறித்த மாணவிக்குச் சேலை வாங்கிக் கொடுக்கவில்லை.
இந்நிலையில் நேற்று வீட்டிலுள்ள அனைவரும் ஆலயத்தின் தீர்த்தோற்சவத்துக்குச் சென்ற நிலையில் வீட்டில் தனித்திருந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆலயத்திலிருந்து மீண்டும் வீடு திரும்பிய குடும்பத்தவர்கள் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளமை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் மாணவியின் சடலத்தை மீட்டுச் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
செல்வநாயகம் ரவிசாந்

No comments:
Post a Comment