இலங்கை – கொரிய தீபகற்பங்கள் இடையே கப்பல் போக்குவரத்தினை அபிவிருத்திச் செய்யும் பொருட்டு விசேட புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
கொரியாவின் இன்சியோன் நகரில் அண்மையில் நடைப்பெற்ற 19வது சர்வதேச கடல்சார் சங்கம் மற்றும் கலங்கரை விளக்கம் ஆணையக மாநாட்டில் கலந்துக்கொள்ளும் பொருட்டு கொரிய அரசாங்கத்தினால் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிற்கு விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விஜயத்தின் போது இவ்ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இதன்போது கொரிய நீரியல் வளங்கல் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் கிம் யொங் - சூன் மற்றும் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க இடையே சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் இருவரிடையேயும் கப்பற்றுறை சார்ந்த தற்கால விடயங்கள் மற்றும் அதன் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடினர்.மேலும் துறைச்சார் தொழில்நுட்பங்களை பரிமாறல், மனித பாதுகாப்பினை உறுதிச் செய்தல் , கடல் சூழலை அறிந்துக் கொண்டு வினைதிறனான கடல் போக்குவரத்தினை மேற்கொண்டு அதில் ஏற்படும் விபத்துக்களை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் புவியை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாலுமிகளின் பயிற்சி சான்றிதழ் திட்டம் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இதன்போது அமைச்சர் மஹிந்த சமரசிங்ச இலங்கை துறைமுகங்களின் போட்டித்திறன் மற்றும் வளர்ச்சி மூலோபாயங்கள் தொடர்பாகவும் கொரிய அமைச்சர் கிம் அவர்களிற்கு விளக்கமளித்ததுடன் , இலங்கையின் போட்டித் தன்மை, அதன் எதிர்கால நடவடிக்கைகள், அபிவிருத்திகள் தொடர்பாக இரு தரப்பினரிடையேயும் கலந்துரையாடப்பட்டது.
இந்த சந்திப்பில் இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கலாநிதி. பராக்கிரம திசாநாயக்க, கொரிய தீபகற்பத்திற்கான இலங்கை தூதுவர் மனிஷ குணசேகர மற்றும் தூதரக அதிகாரிகள் பலரும் கலந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment