திருகோணமலையில் 56941 குடும்பங்களுக்கு வீட்டுத் தேவை காணப்படுவதுடன் கடந்த 03 ஆண்டுகள் முன்னெடுத்த திட்டத்தின் நிதியின் மொத்தத்தை 2018ம் ஆண்டு திட்ட முன்னெடுப்புக்காக தேசிய வீடமைப்பு அமைச்சு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் முகாமையாளர் ந.திருக்குமார் தெரிவித்தார்.
இன்று 29ம் திகதி காலை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஜூன் 23 தொடக்கம் 29 வரையான தேசிய வீடமைப்பு வாரத்தை முன்னிட்டு தாம் மேற்கொள்ளும் வேலைத்திட்டங்கள் மற்றும் வருடாந்த வேலைத்திட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவு படுத்தும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் திருகோணமலை மாவட்டத்திற்கு இவ்வாண்டு 100 மாதிரி வீட்டுத் திட்டங்களை அமைக்க வீடமைப்பு அமைச்சரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் இத்திட்டங்களில் துறை சார்ந்தவர்களுக்கான மாதிரி வீட்டுத் திட்டத்தை அமைக்கவும் உள்ளோம்.
அதாவது ஊடகவியலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள் ஆகியோரில் சொந்த வீடுகள் இல்லாதவர்களுக்கு மாதிரி வீட்டுத் திட்டத்தை அமைக்கவும் உள்ளோம் என்றார்.
அமைச்சர் சஜித் பிரேமதாசா அமைச்சை பொறுப்பேற்றது முதல் 2015 முதல் 2017 மார்கழி வரை 7115 பயனாளிகளுக்கு 498 மில்லியன் செலவில் வீட்டுத் திட்டங்களுக்கான உதவிகள திருகோணமலை மாவட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இன வேறுபாடின்றி சகல மக்களுக்கும் சமமான தமது சேவையை வழங்கி வருகின்றார். எனவும் தெரிவித்தார்.
அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையிடம் வீட்டுக்கடன் பெற்றவர்களிடம் இருந்து 47 மில்லியன் ரூபாய் மீளச்செலுத்தப்படாமல் நிலுவையாக உள்ளது. எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment