மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமன்றி வடகிழக்கு பகுதிகளில் வாழும் மக்களிடையே விரக்தி மனப்பாங்கும் புரிந்துணர்வு இல்லாமையும் பதட்ட நிலைகளுமே தற்கொலைக்கு காரணமாக அமைகிறது இந்த நிலையை மாற்றுவதற்கு சமூகம் சார்ந்த அமைப்புக்களும் ஆலயம் சார்ந்த அமைப்புக்களும் ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மக்களை ஆற்றுப்படுத்தும் செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பாக்கியசெல்வம் அரியநேத்திரன் கூறினார்.
தற்போதைய தற்கொலை சம்பவங்கள் அதிகரிப்பை எவ்வாறு தடுக்கலாம் என ஊடகவியலாளர் கேட்டபோதே இவ்வாறு குறிப்பிட்டார் மேலும் கருத்து கூறிய பா.அரியநேத்திரன்.
கடந்த 2009.மே.18க்கு முந்திய காலம் அதற்கு பிந்திய காலம் என இரண்டாக வகுத்து தற்கொலை ரீதியாக வடக்கு கிழக்கு பகுதிகளை ஆய்வு செய்வோமாக இருந்தால் 2009.மே.18.க்கு முந்திய காலத்தில் வடக்கு கிழக்கு பகுதிகளில் விடுதலை ரீதியான ஆயுதப்போர் இடம்பெற்ற காலமாகும்.
அந்த காலப்பகுதிகளில் வடகிழக்கில் வாழ்ந்த மக்களிடையே புரிந்துணர்வு விட்டுக்கொடுக்கும் மனநிலை மற்றவரின் கருத்தை உள்வாங்கும் நிலைமை சீரான ஒழுக்கம் போதைப்பொருட்கள் பாவனை இல்லாமை நாட்டுப்பற்று விடுதலை உணர்வு தியாகத்தை மதிக்கும் பக்குவம் மற்றவர் மீது பழிதீர்கும் வஞ்சனை அற்ற நிலை கூட்டு வாழ்வு என பலதரப்பட்ட விடயங்களில் வடகிழக்கு மக்கள் மத்தியிலும் வடகிழக்கு இளைஞர்கள் மத்தியிலும் நல்ல சிந்தனைகள் மேலோங்கி காணப்பட்டன.
இது உண்மை தற்போது அந்த உண்மையை கூறினாலும் சிலர் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவம் தற்போது அவர்களிடம் இல்லை. அவ்வாறான ஒரு சூழல் கடந்த 2009.மே.18 வரை நிலவியதால் தற்கொலை செய்யக்கூடிய மனோநிலை எந்த பிரச்சனை வந்தாலும் ஏற்படவில்லை.
ஆனால் தற்போது முள்ளிவாய்க்கால் அவலம் ஏற்பட்டு விடுதலைப்புலிகள் மௌனம் ஏற்பட்டு இந்த ஒன்பது வருடத்திற்குள் நூற்றுக்கணக்கான யுவதிகள், இளைஞர்கள் பல பல்கலைக்கழக மாணவர்கள், மத்திய கிழக்கு நாடுகளில் வேலைவாய்ப்புக்காக சென்றவர்கள், குடும்பத்தலைவர்கள், முன்னாள் போராளிகள் என பல தற்கொலை சம்பவங்கள் தினமும் அதிகரித்துள்ளமை கவலையளிக்கின்றது.
இதற்கான காரணங்கள் பலவகையாக பலராலும் முன்வைக்கப்படுகிறது அதிலும் போருக்கு பிந்திய இந்த ஒன்பது வருடங்களில் என்றும் இல்லாத வகையில் பல நுண்கடன் நிறுவனங்கள் பல பெயர்களில் வட்டியுடன் கடன் வழங்கும் செயல்திட்டங்களை குறிப்பாக குடும்ப பெண்களை கவரும் விதத்தில் செயல்பாடுகளை முன்னெடுப்பதும் அதில் கடன் பெறும் பெண்கள் பெற்ற கடனை மீளச்செலுத்துவதற்காக அந்த கடனை வாழ்வாதார திட்டங்களுக்கு பயன்படுத்துவதில்லை.
மாறாக பெற்ற கடனை அன்றாட உணவு, ஆடம்பர பொருள் கொள்வனவு உடை ஆபரணங்களை வாங்குதல் என்பவற்றுக்கு செலவு செய்கின்றனர். மீளப்பெற்ற கடனை அடைப்பதற்கு வேறு நுண்கடன் நிறுவனத்தில் கடன் பெற்று அதை செலுத்துவதும் கடன் தொகை அதிகரிக்கும்போது தமது எஞ்சிய சொத்துக்களை விற்பதும் அதனால் மன அழுத்தம் குடும்ப தகராறு உறவு முறைபிரிவு என்பன ஏற்படும் போது தற்கொலை செய்வதே வழி என தீர்மானிக்கின்றனர்.
நுண்கடன் நிறுவனங்கள் நல்ல நோக்கத்துக்காகவே கடன் வழங்குகின்றன. அந்த நோக்கத்தை பயனாளிகள் சரியாக பயன்படுத்த தவறும் காரணமே கடன் தொகை கூடி தற்கொலை செய்கின்ற நிலைக்கு தள்ளப்படுவதை காணலாம்.
இதுபோன்றே போருக்கு பிந்திய காலத்தில் ஏமாற்றும் எண்ணம் இளைஞர்களிடையே கூடுதலாக உள்ளது. இதனால் பல்கலைக்கழக மாணவிகள் கூட காதல் என்ற வலையில் நம்பி ஏமாந்து தற்கொலை புரிவதையும் காணமுடிகிறது.
இதேபோலவே போருக்கு பிந்திய காலத்தில் கைத்தொலைபேசி பாவனை முகநூல்பாவனை சமூகவலைத்தள செயல்பாடுகள் காரணமாகவும் அதை கையாளும்போது நேரடியாக முகத்தை பார்த்து கதைக்கும்போது ஏற்படும் புரிந்துணர்வு இல்லாமல் சமூக வலைத்தள உரையாடலால் ஏற்படும் பாதிப்புக்களும் உடனடியாக விரக்தி மனப்பாங்கு ஏற்பட்டு தற்கொலையே இறுதி முடிவு என்ற நிலை தோன்றுகிறது.
இவ்வாறான விடயங்களை தடுப்பதற்கு எந்த அரச நிறுவனங்களோ அரச சார்பற்ற நிறுவனங்களோ மனநிலை வைத்திய நிறுவனங்களோ வடகிழக்கு மக்களுக்கு ஆற்றுப்படுத்தும் செயல் முறைகளை கையாளவில்லை.
நிறுவனங்களை விட்டு ஒவ்வொரு ஊரிலும் உள்ள ஆன்மீக நிறுவனங்கள் ஆலயங்கள் என்பன போருக்கு பிந்திய காலத்தில் சமூகத்தாக்க மனநிலையை அகற்றக்கூடிய ஆற்றுப்படுத்தல் செயல்பாடுகளை செய்திருப்பின் ஓரளவு தற்கொலை முயற்சிகளில் இருந்து பாதுகாத்திருக்கலாம்.
தற்போதும் காலம் கடந்தாலும் பரவாய் இல்லை. இவ்வாறான மனநிலையை மாற்றக்கூடிய மகிழ்ச்சியை பரப்பக்கூடிய திட்டங்களை கிராம ரீதியாக தெருக்கூத்து, கலை நிகழ்வு, விளையாட்டு, கருத்தரங்கு செயலமர்வுகளை நடத்துவதும் பாடசாலைகளில் காலைவேளை மாணவர்களிடையே தற்கொலை மன அழுத்தங்களை மாற்றும் போதனைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
ஆலயங்கள் தோறும் இதற்கான கதாப்பிரசங்கம் குருபோதனைகளையும் மேற்கொண்டு ஒன்றிணைந்த செயல்பாடாக தற்கொலை முயற்சிகளை தடுக்கும் மனமாற்றத்தை ஏற்படுத்தினால் மட்டுமே எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமன்றி வடகிழக்கிலும் தற்கொலைகள் தடுக்கலாம் எனவும் பா.அரியநேத்திரன் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment