அரசாங்க நிறுவனங்கள் கடந்த வருடத்தில் 50 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நஷ்டத்தை எதிர்கொண்டிருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்றுத் தெரிவித்தார்.
ஒழுங்கான பொது நிதி முகாமைத்துவத்தை அரசாங்க நிறுவனங்கள் கடைப்பிடித்திருந்தால் இந்த பில்லியன் ரூபாய்களை பொது மக்களின் நலன்புரிக்கு அல்லது பொருளாதார அபிவிருத்திக்குப் பயன்படுத்தியிருக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
பத்தரமுல்லையில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற ஊடகவியலாளர்களை விழிப்புணர்வூட்டும் செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சபாநாயகர் இதனைத் தெரிவித்தார்.
அரசாங்க நிறுவனங்கள் எதிர்கொண்ட பில்லியன் கணக்கான நஷ்டம் குறித்து பொது மக்கள் அதிக கவனம் செலுத்தவில்லை. எனினும், 118 பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்த விடயங்களே மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
2014ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மதிப்பீட்டில், அரசாங்கத் திணைக்களங்களினால் மேற்கொள்ளப்பட்ட செலவீனங்களில் 40 வீதம் வீண்விரயமாகும். இவ்வாறான நிலையில் கோப் குழு மற்றும் அரச கணக்குக் குழு போன்றன அரசாங்க நிறுவனங்களில் ஏற்படக்கூடிய நஷ்டங்கள் மற்றும் வீண்விரயங்களை ஊடகங்கள் மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டுவருகின்றன என்றார்.
தமக்கு விரும்பியவாறு எவரும் பொது மக்களின் பணத்தைச் செலவுசெய்ய முடியாது. பொது மக்களின் நிதி தொடர்பில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்த நாம் கடும் முயற்சிசெய்து வருகின்றோம். கடந்த காலங்களைப் போலன்றி ஒவ்வொரு மூன்று மாதத்துக்கும் ஒரு தடவை அரசாங்க நிறுவனங்கள் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.
அரச கணக்குக் குழுவினால் கோரப்படும் அறிக்கைகளை அரச நிறுவனங்கள் உரிய நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் 80 வீதமான அரசாங்க நிறுவனங்கள் அரச கணக்குக் குழுவுக்கு பொறுப்புக் கூறத் தொடங்கியுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்
No comments:
Post a Comment