முஸ்லிம்களுக்கு இங்கு இடமில்லை எனக் கூறி காத்தான்குடி வர்த்தகரை கல்முனையில் தாக்கிய சம்பவம் ஒன்று இன்று வியாழக்கிழமை இடம் பெற்றுள்ளது.
புதிய காத்தான்குடி ஆறாம் குறிச்சி ஏ.எல.எஸ் மாவத்தையைச் சேர்ந்த முகம்மட் சப்ரி மற்றும் முகம்மட் இல்யாஸ் ஆகியோர் இன்று (31.5.2018) வியாழக்கிழமை கல்முனையிலுள்ள வைத்தியசாலை வீதிக்கருகில் தனது வியாபாரப் பொருட்களை போட்டு வியாபாரம் செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த சில இளைஞர்கள் இங்கு முஸ்லிம்கள் வியாபாரம் செய்ய முடியாது எனக் கூறி துவேசமான வார்த்தைகளால் பேசியுள்ளனர்.
இதன் போது குறித்த வியாபாரிக்களுக்கும் அங்கு வந்த சில இளைஞர்களுக்குமிடையில் வாய்த்தர்கம் ஏற்பட்டுள்ளது. அந்த இளைஞர்கள் காத்தான்குடி வர்த்தகர்களை தாக்கியுள்ளதுடன் அவர்களின் வியாபாரப் பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
இவர்களுக்கு இடம் கொடுத்ததாக தெரிவிக்கப்படும் வயோதிபர் ஒருவரையும் தாக்கியதுடன் இங்கு முஸ்லிம் வர்த்தகர்கள் வியாபாரம் செய்யக் கூடாது எனவும் அச்சுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக காத்தான்குடி வர்த்தகர்கள் கல்முனைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதுடன் சம்பவத்தின் போது பதிவு செய்த காணொளி மற்றும் அடையாளாப்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் இலக்கம் போன்றவைகளையும் பொலிசாருக்கு வழங்கியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிசார் விசாரணகளை நடாத்தி வருவதாக தெரிய வருகின்றது.
எம்.எஸ்.எம்.நூர்தீன்
No comments:
Post a Comment