சுகாதாரத்துறை உள்ளிட்ட நாட்டின் அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் தேவையான சகல வசதிகளையும் வழங்குவதற்கு ஜனாதிபதி என்ற ரீதியில் தான் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
இன்று (31) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பதிவு செய்யப்பட்ட மற்றும் உதவி மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பதிவு செய்யப்பட்ட மற்றும் உதவி மருத்துவ அதிகாரிகள் கீர்த்திமிக்க சேவையாளர்கள் என்ற வகையில் நாட்டின் சுகாதாரத் துறைக்காகவும் குறிப்பாக கிராமிய மக்களுக்காக ஆற்றும் சேவைகளை ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
சுகாதார அமைச்சராக தான் பணியாற்றியபோது மருத்துவ சங்கத்துக்கு பல வரப்பிரசாதங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்ததுடன் தற்போதைய சுகாதார அமைச்சரால் மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்களையும் ஜனாதிபதி பாராட்டினார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அன்று அமைச்சர்களாலோ அல்லது அமைச்சின் செயலாளர்களினாலோ முடிவுகள் எடுக்கப்படாததுடன் அவர்களுக்கு மேல் இருந்தவர்களாலேயே முடிவுகள் எடுக்கப்பட்டன.
எனினும் இன்று சகல அமைச்சுக்களும் சுதந்திரமாக தனது செயற்பாடுகளை மேற்கொள்ள ஜனாதிபதி என்ற ரீதியில் தான் வழிவகுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
முப்பது ஆண்டுகால சேவையை நிறைவு செய்த ஓய்வுபெற்ற மற்றும் தற்போது சேவையில் உள்ள பதிவு செய்யப்பட்ட மற்றும் உதவி மருத்துவ அதிகாரிகளுக்கு சிறப்பு விருதுகள் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது..
முன்னாள் சுகாதார அமைச்சராக பணிபுரிந்த பீ.எம்.பி.சிறிலுக்கு ஜனாதிபதியினால் விசேட கௌரவ விருது வழங்கப்பட்டது.
பதிவு செய்யப்பட்ட மற்றும் உதவி மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மஹிந்த லியனகேவினால் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன அமைச்சின் செயலாளர் ஜனக்க சுகததாச சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment