ஜனாதிபதியும் பிரதமரும் அரசியலமைப்புக்கு அமைய யதார்த்தபூர்வமான புதிய அமைச்சரவையை உருவாக்கியிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் சஜித் பிரேமதாச நேற்று தெரிவித்தார். இதேவேளை, புதிய அமைச்சரவை அடுத்த வாரமளவில் கூடி ஆராயுமென்றும் அவர் கூறினார்.
புதிய அமைச்சரவை நியமனம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வைத் தொடர்ந்து அமைச்சர் சஜித் பிரேமதாச ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அமைச்சர் மேலும் கூறியதாவது,-
ஜனாதிபதியும் பிரதமரும் கூடி ஆராய்ந்து இணக்கப்பாட்டுக்கு வந்ததன் அடிப்படையிலேயே புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது.
இம்முறை புதிதாக பல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்தும் அரசியலமைப்புக்கு அமைய யதார்த்தபூர்வமாகவே முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவையை நியமித்த நொடியே மக்களால் அது தொடர்பில் திருப்தியோ அதிருப்தியோ அடைய முடியாது. அதற்கு சிறிது காலம் தேவை. புதிய அமைச்சர்களின் செயற்பாட்டின் அடிப்படையிலேயே மக்கள் தமது கணிப்பீட்டை முன்னெடுக்க முடியும்.
தேசிய அரசாங்கத்தில் இரண்டு கட்சிகளுக்கும் முன்னுரிமையளிக்கும் வகையிலேயே அமைச்சரவை அந்தஸ்துக்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment