யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்க முடியாது என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தடை விதித்துள்ளது. குறித்த தூபி அமைப்பது அரச கொள்கைகளுக்கு எதிரானது என்று ஆணைக்குழு தெரிவித்து தூபி அமைப்பதைத் தடுத்துள்ளது என்று பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
அதனால் தூபி அமைக்கும் பணி கைவிடப்பட்டது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.
வன்னியில் இறுதிப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் உறவுகள் உட்பட முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவுகூருவதற்கு நினைவுத்தூபி அமைக்க யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் திட்டமிட்டனர். பல்கலைக்கழக வளாகத்திலுள்ள கோவில் முன்றலில் அதை அமைக்கும் பணியைக் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பித்திருந்தனர். ஆனால், அந்த இடத்தில் நினைவுத்தூபி அமைப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் தடங்கல் ஏற்பட்டது.
அதன்பின்னர் பல்கலைக்கழக நிர்வாக உயர்மட்டத்தினருக்கும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை பிற்பகல் பேச்சு இடம்பெற்றது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவிடத்துக்கு அருகில் நினைவுத் தூபியை அமைக்குமாறும் பல்கலைக்கழக உயர்மட்டத்தினர் மாணவர் ஒன்றியத்தினரிடம் ஆலோசனை வழங்கினர்.
பல்கலைக்கழக நிர்வாகத்தின் கோரிக்கையை பரிசீலனை செய்த மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் அதற்கு இணக்கம் தெரிவித்தனர். முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கும் பணிகள் பல்கலைக்கழக வளாகத்தில் நிர்வாகத்தால் அடையாளம் காட்டப்பட்ட இடத்தில் கடந்த வியாழக்கிழமை தொடக்கம் நடைபெற்று வந்தது.
இந்தநிலையில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நினைவுத்தூபியின் கட்டட அமைப்புப் பணிகளை முற்றாகத் தடுக்குமாறு அறிவித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment