அண்மையில் கவுடுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை நோக்கி வந்த சிறுமியொருவர் ஜனாதிபதியின் அரவணைப்பில் மழலை மொழி பேசி அவருடன் கொஞ்சிக் குலாவியதை எம்மால் அவதானிக்க முடிந்தது.
ஜனாதிபதியை சந்திக்க வருகைதந்த தினுல்யா சனாதி என்ற இந்த சிறிய அதிதி, மெதரிகிரிய அமுனுகம பிரதேசத்தில் தனது பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார்.
மெதரிகிரிய பிரதேசத்தில் நேற்று (01) இடம்பெற்ற நிகழ்வுகளில் பங்குபற்றிய ஜனாதிபதி அவர்கள், இந்த சிறுமியின் வீட்டிற்கு சென்று அவளது நலன் விசாரித்ததுடன், மிகுந்த வேலைப்பளுவின் மத்தியிலும் மிகுந்த ஆவலோடு சிறுமியுடன் அளவளாவியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இரண்டு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் மூத்த பிள்ளையான தினுல்யா சனாதி மழலை மொழி பேசும் காலத்திலிருந்தே ஜனாதிபதி அவர்களை தொலைக்காட்சியில் காணும் சந்தர்ப்பங்களில் சிரித்தவாறே ஏதேனும் கூறியவண்ணம் அந்நிகழ்ச்சியை பார்ப்பதாக அவளது பெற்றோர் தெரிவித்தனர்.
அண்மையில் ஜனாதிபதி அவர்கள், மெதிரிகிரிய, கவுடுல்ல பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளார் என்பதை அறிந்த சிறுமி தனது தந்தையிடம் ஜனாதிபதியை பார்க்க செல்ல வேண்டுமென அடம் பிடித்து அவ்விடத்திற்கு சென்றபோதிலும் மேடையின் அருகில் செல்ல அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை.
ஆயினும் திடீரென பொதுமக்களிடையே இருந்து ஜனாதிபதியை நோக்கி ஓடிவந்த அச்சிறுமியை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தடுக்க முயற்சித்த போதிலும் ஜனாதிபதி அவர்கள் அதனை தடுத்து சிறுமியை தன்னிடம் வர அனுமதித்தார்.
மிகுந்த பாசத்தோடு ஜனாதிபதி அவர்களின் அரவணைப்பில் மழலை மொழி பேசிய சிறுமி, அந்நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும் ஜனாதிபதி அவர்களின் அருகிலேயே காணப்பட்டார்.
அந்த நினைவுகளுடன் நேற்று அச்சிறுமியின் வீட்டுக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள், சிறுமியிடம் நலன் விசாரித்ததுடன், அந்த வீட்டில் காணப்பட்ட ஜனாதிபதி அவர்களினதும் அச்சிறுமியினதும் சந்திப்பு பற்றிய பத்திரிகை செய்திகளையும் தமது புகைப்படங்களையும் கண்ணுற்றார்.
No comments:
Post a Comment