அம்பாறை நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்ட இனவாத தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி சட்டத்தை நிலைநாட்டுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலும் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் வேண்டுகோள்விடுத்துள்ளன.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தனித்தனியாக கடிதங்களை அனுப்பி வைத்துள்ளன. அதேபோன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் பிரதமருக்கு தனியான கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
உலமா தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
அம்பாறையில் முஸ்லிம்களின் வணக்கஸ்தலமொன்றும் நான்கு கடைகளும் இனவாத குழுவொன்றினால் தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளன. இது நல்லாட்சி அரசாங்கத்துக்கு இனவாதிகளால் ஏற்படுத்தப்பட்ட சேதமாகும். நிலைமை மேலும் மோசமடையும் முன்பு சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு உடனடி நடவடிக்கையினை மேற்கொள்ளுங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி வெறுப்புப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதையும் குண்டர்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம். அம்பாறை நகரில் நடந்த சம்பவம் இதன் தொடர்ச்சியாகும். -முன்கூட்டியே மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
முஸ்லிம்களால் நடத்தப்படும் உணவகங்களில் வழங்கப்படும் உணவுகளில் கருத்தடை மாத்திரைகளை கலப்பதாகவும் முஸ்லிம்களால் நடாத்தப்படும் ஆடை விற்பனை நிலையங்களில் கருத்தடை செய்யும் இனிப்புப் பண்டங்கள் வழங்கப்படுவதாகவும் சிங்கள மக்கள் மத்தியில் பொய்யான பிரசாரங்கள் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் நாம் வைத்திய நிபுணர்களை தொடர்பு கொண்டபோது அவ்வாறான கருத்தடை முறைகளை முன்னெடுக்க முடியாது என்பதை உறுதிப்படுத்தினர்.
எனவேதான் நாம் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸாரும் சுகாதார அதிகாரிகளும் விசாரணைகளை மேற்கொண்டு உண்மையை வெளிப்படுத்த வேண்டும் எனவும் இதற்கான நடவடிக்கையை முன்னெடுக்குமாறும் வேண்டுகோள் விடுக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment