தோட்ட அதிகாரியை இடமாற்ற செய்ய கோரி உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 31, 2018

தோட்ட அதிகாரியை இடமாற்ற செய்ய கோரி உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம்

அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்ட அதிகாரியை இடமாற்றம் செய்யுமாறு கோரி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக இன்றும் (31) ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.

இதில் 500 ற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் தோட்டத்தில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாக கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த தோட்டத்தைச் ​சேர்ந்த தொழிலாளி ஒருவரை கடந்த மாதம் தோட்ட நிர்வாகம் வேலை நிறுத்தம் செய்தது.

இவருக்கு தோட்ட அதிகாரி தொழில் தருவதாக பல முறை கூறி ஏமாற்றியதன் காரணமாகவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் உடனடியாக குறித்த தொழிலாளிக்கு தொழில் வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

அத்தோடு தோட்ட அதிகாரியின் கொடும்பாவியும் ஆர்பாட்டக்கார்களால் எரியூட்டப்பட்டது. இதேவேளை நேற்று (30) குறித்த தொழிலாளி மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். எனினும் ஏனைய தொழிலாளர்கள் அவரை காப்பாற்றியுள்ளனர்.

நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக கேட்டறிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், பொது செயலாளரும், நுவெரலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் மக்களை சந்திக்க சென்றிருந்தார்.

சம்பவம் தொடர்பாக எங்கள் தொழிற்சங்கத்திற்கு சொன்னீர்களா என வினவிய பொழுது, அதற்கு தொழிலாளர்கள் ஆம் எனவும், தொழிலாளர் தேசிய சங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இந்த பிரச்சனையை தனக்கு பேசமுடியாது என ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இ.தொ.கா தொழிற்சங்க அங்கத்தவர்களுக்கு மாத்திரம் பேசமுடியும் என தெரிவித்ததாகவும், இதன்போது அங்கிருந்த கண் பார்வையற்ற ஒருவர் சேர் நீங்கள் அப்படி சொல்ல முடியாது என்று கூறிய பொழுது தன்னை தரம்குறைவாக பேசியதுடன் தாக்கியதாகவும் அந்த தொழிலாளி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளதாக இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தொழிலாளர்கள் தெரிவித்தார்கள்.

இன்றைய ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் கலந்துகொண்டு, ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற போது மக்கள் மத்தியில் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

மக்களுக்கு பிரச்சினை ஏற்படும் பொழுது நாங்கள் கட்சி பார்த்து செயல்படுவதில்லை. எங்களுடைய மக்களை தாக்குபவர்களை தான் நாங்கள் தலைவர்களாக வைத்திருக்கின்றோம்.

எனவே இதனை கருத்தில் கொண்டு மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். அத்தோடு குறித்த தோட்ட அதிகாரியை இடமாற்றம் செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.

எதிர்வரும் திங்கட்கிழமை ஹட்டனில் உள்ள தொழில் திணைக்களத்தில் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்மானத்தை பெற்றுக்கொடுப்போம் என அவர் இதன்போது உறுதியளித்துள்ளார்.

No comments:

Post a Comment