வாகரைப்பிரதேச இனச்சுத்திகரிப்பு ஒரு அரச பயங்கரவாத நடவடிக்கை- ஜுனைட் நளீமி - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 28, 2018

வாகரைப்பிரதேச இனச்சுத்திகரிப்பு ஒரு அரச பயங்கரவாத நடவடிக்கை- ஜுனைட் நளீமி

கடந்த 05.02.2018ம் வாகரை பிரதேச செயலகப்பிரிவிற்குற்பட்ட ஆலங்குளம் கிராமத்தில் முஸ்லிம் நபர் ஒருவருக்கு சொந்தமான காணியொன்றினை எவ்வித முன்னறிவித்தலுமின்றி வாகரைப்பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், வாகரைப்பிரதேச சபை உத்தியோகத்தர்களும் பெகோ இயந்திரம் கொண்டு சுற்றுவேலிகளை உடைத்து அத்துமீரி கட்டிடம் ஒன்றினை அமைக்க முற்பட்டதனை அடுத்து இப்பிரதேசத்தில் திட்டமிட்ட அடிப்படையில் இனமுருகள் நடவடிக்கை ஒன்றிற்கு தூபம் இடப்பட்டுள்ளது. 

காணியின் சொந்தக்காரரான முஹம்மது அலியார் அஹமது உசைன் (70) என்பவர் கருத்து வெளியிடுகையில் கடந்த 05.02.2018ம் திகதி எனது காணியின் சுற்று வேலிகளை உடைத்து சிலர் அத்து மீறுவதாக தகவல் கிடைத்து எனது இடத்துக்கு சென்று பார்வையிட்டபோது மேற்படி பிரதேச செயலக, மற்றும் சபை அதிகாரிகள் எனது காணியில் எவ்வித முன்னறிவித்தலும் இன்றி வேலிகளை உடைத்து காணியில் அத்துமீறி வேலை செய்து கொண்டிருந்தனர். 

உடனடியாக அவ்விடம் சென்ற நான் இது எனது காணி என குறிப்பிட்டபோது, உங்களது காணியென்றால் பிரதேச செயலாளரிடம் உரிய ஆவணங்களை சமர்ப்பியுங்கள் என கூறி மிரட்டினர். எனது மருமகனிடம் உரிய ஆவணங்கள் இருந்ததனால் அவர் பனி நிமித்தம் கொழும்பு சென்றிருப்பதனாலும் இரண்டு நாள் அவகாசம் கேட்டேன். ஆனால் அவர்கள் அதனை செவிமடுப்பதாக இருக்கவில்லை. நான் பொலிசாரிடம் முறையீடு செய்த பின்னர் எவ்வித தீர்வும் இல்லாத நிலையில் தேர்தல் முடிந்த கையோடு 16.02.2018ம் திகதி எனது சட்டத்தரணிகளுடன் வாகரை பிரதேச செயலாளரிடம் எனது ஆவணங்களை எடுத்து சென்றபோது எழுத்துமூல கோரிக்கை விடுக்குமாறு பணித்தார். 

மறுநாள் உரிய ஆவணங்களுடன் எழுத்துமூல கோரிக்கை விடுத்தபோது இன்று பிற்பகல் உங்களுக்கான உரிய தீர்வினை அறிவிப்பதாக கூறி எனது தொலைபேசி இலக்கத்தையும் பெற்றுக்கொண்டார். என்றபோதும் அன்றைய நாள் எவ்வித தகவலும் எனக்கு கிடைக்கப்பெறாத நிலையில் நான் மாகாண காணி ஆணையாளரிடம் முறைப்பாடொன்றினை செய்தேன். அவர் தொலைபேசி மூலம் காணி உத்தியோகத்தரை தொடர்புகொண்டு வேலைகளை உடனடியாக நிறுத்துமாறும் காணி அதிகாரம் பிரதேச செயலாளருக்கு இல்லையெனவும், பாதிப்படைந்த எமக்கு உரிய தீர்வினை வழங்குமாறும் கோரினார்.

மாகாண காணி ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கமைய மறுநாள் என்னை வாகரை பிரதேச செயலகத்திற்கு வருகை தருமாறு கோரிய காணி உத்தியோகத்தர் அன்று அலுவலகம் வரவில்லை என அதிகாரிகள் அங்கு சென்றதும் குறிப்பிட்டனர். காணி ஆணையாளரது வேலையை இடைநிறுத்தி விசாரணை செய்யுமாறு விடுக்கப்பட்ட கடிதத்தை கையளித்து விட்டு போலீசாரிடம் சென்று மீண்டும் எமது முறைப்பாட்டினை குறிப்பிட்டோம். அப்போது அவர் மீண்டும் பிரதேச செயலாளரிடம் தொடர்பு கொண்டபோது எமக்கு அன்றைய தினம் எழுத்துமூலம் தீர்வினை தருவதாக குறிப்பிட்டார். 

ஆனாலும் அன்றும் எமக்கு எவ்வித தீர்வும் கிடைக்காத நிலையில் மறுநாள் எமது சட்டத்தரணியுடன் பிரதேச செயலாளரை சந்திக்க சென்றபோது அவர் எமக்கு பதில் அனுப்பியதாக பொய் கூறினார். நான் எதுவும் கிடைக்கவில்லை என்றவுடன் பின்னர் எனக்கான கடிதம் ஒன்றை தயாரித்து தந்தார். அவற்றில் எனக்கு வழங்கப்பட்ட காணி ஒப்பமானது போலியானது என பிழையான மூன்று காரணங்களை குறிப்பிட்டிருந்தார். அத்துடன் என்னிடம் எவ்வித விசாரணைகளும் அவர் மேற்கொள்ளாமல் அலட்சியமாக நடந்துகொண்டார் எனக்குறிப்பிட்டார். 

மேற்படி விடயம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்களும் இனமுருகளை தூண்டும் சம்பவங்களும் காணப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. குறித்த காணி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் அஹமது லெப்பை (70) மேற்படி காணி உரிமையாளர் யுத்தம் முடிவடைந்த பின்னர் தனது காணியினை அடைத்து செப்பனிட பல தடவை முயற்சி செய்தபோதும் அதிகாரிகள் தடங்களை ஏற்படுத்தி இருந்தனர். பின்னர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் வாகரை பிரதேச காணி உத்தியோகத்தர் தலைமையிலான அதிகாரிகள் உசைன் என்பவருக்கு மேற்படி காணியினை அளந்து வழங்கி பின்னர் வேலியிடப்பட்டது. 

இதற்கு முன்னரும் இக்காணிக்கு அருகில் உள்ள முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான காணியில் மேற்படி கட்டடம் அமைப்பதற்காக பொருள் பறிக்கப்பட்டு உதவி பிரதேச செயலாளரினால் காணியை விட்டு அப்புறப்படுமாறு அறிவுறுத்தலும் விடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் காணி உரிமையாளரின் போராட்டத்தினால் அம்முயற்சி வெற்றியளிக்கவில்லை என குறிபிடுகின்றார். 

தற்போது இக்காணியினை பெகோ இயந்திரம் கொண்டு கையகப்படுத்த முயற்சி செய்ய முற்பட்டபோது அயலவர்களான நாங்கள் இக்காணி தனி நபருக்கு சொந்தமானது அதிகாரிகளே இதனை உத்தியோகபூர்வமாக அடையாளப்படுத்தி அவருக்கு வழங்கினர் எனக்குறிப்பிட்டபோது அவர்கள் அதனை அசட்டை செய்யவில்லை என குறிப்பிடுகிறார். 

குறித்த காணியில் தேர்தலுக்கு ஓரிரு நாட்கள் இருக்கும்போதே அத்துமீறி வேலிகளை உடைத்து உடமைகளை சேதம் செய்தமை தமிழ் முஸ்லிம்கள் சமாதானமாக வாழும் இப்பகுதியில் இனமுருகளை தூண்டும் செயல்பாடு என குறிப்பிடும் ஹயாத்து முஹம்மது ஜெய்னுதீன் (58) உண்மையில் இதுவொரு பயங்கர வாத நடவடிக்கை போன்று உள்ளது என குறிப்பிடுகின்றார்.

பிரதேச சபைக்கான காணி எங்கு ஒதுக்கப்பட்டது.
பிரதேச சபைக்கான கடைகள் அமைக்க குறித்த காணிக்கு அண்மையில் பல ஏக்கர் அரச காணி உள்ளபோதும் ஏற்கனேவே ஒரு முஸ்லிம் நபருக்கு சொந்தமான காணியே அடையாளப்படுத்தப்பட்டு இனச்சுத்திகரிப்பு செய்வதற்காக போலீஸ் முறைப்பாடும் அக்காணிக்கு செய்யப்பட்டிருந்தது. 

என்றபோதும் அம்முயற்சி தோல்வியடைய உசைன் என்பவரது காணியில் பலாத்காரமாக அத்துமீறி கட்டடம் அமைக்கும் முயற்சியில் வாகரை பிரதேச செயலக அதிகாரிகள், பிரதேச சபை செயலாளர் ஆகியோர் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அத்தோடு இக்காணியினை செம்மைப்படுத்த பிரதேச சபையில் பெகோ இயந்திரம், டெக்டர் இயந்திரம், பிரதேச சபையின் எல்லைக்குள் இக்காணிக்கு மிக அண்மையில் கிறவள் காணப்படுகின்றபோதும் சுமார் ஆறு இலட்சம் ரூபா செலவில் புதிய சபை கடைகள அமையப்பெற இருக்கும் இடத்தில் தனியாருக்கு கிறவள் கொட்ட அனுமதியளித்து வேலையை அவசரப்படுத்தியது நிதிப்பிரமானங்கள் அடிப்படையிலும், நிர்வாக ரீதியிலும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. 

ஏற்கனவே முன்னைய காணிக்குள் கொட்டப்பட்ட கட்டடப்பொருற்கள் தொடர்பில் எவ்வித நிர்வாக நிதிப்பிரமானங்கள் பின்பற்றப்பட்டன என்ற விடயம் குறித்து ஆராயவேண்டியுள்ளது என பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்தார். இதே வேலை வேலியடைக்கப்பட்டு முன்னைய பிரதேச செயலாளரினால் அளிப்புச்செய்யப்பட்ட்ட காணியினுள் பயங்கரவாதிகள் போன்று நிர்வாக நடைமுறைக்கு மாற்றமாக செயற்பட்டமை குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையில் உதவி பிரதேச செயலாளர்.
வாகரைப்பிரதேச செயலகப்பிரிவில் முஸ்லிம் சிங்கள மக்களுக்கு சொந்தமான காணிகளை பலவந்தமாக கையகப்படுத்தி இனச்சுத்திகரிப்பு செய்யும் நடவடிக்கை கச்சிதமாக தமது அதிகாரங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படுவதாக பாதிப்படைந்த மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தனக்கு சொந்தமான 24 ஏக்கர் காணியினை விட்டும் அப்புறப்படுமாறு உதவி பிரதேச செயலாளரினால் அறிவித்தல் ஒட்டப்பட்டிருப்பதாக குறிப்பிடும் போலீஸ் சேவையில் பணியாற்றி உபாதைக்குள்ளாகி ஓய்வுபெற்றுள்ள வஹாப் (46) என்பவர் தன்னிடம் காணப்படும் காணி உறுத்து ஆவணங்களை காண்பிக்கிறார். 

இதுவொரு திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை என குறிப்பிடும் இவர் இத்தகைய நடவடிக்கை பயங்கரவாதத்திற்கெதிராக போராடிய எனக்கு அதிகார பயங்கரவாதம் மூலம் மேற்கொள்ளப்படும் பதில் தாக்குதலாக அமைகின்றது என குறிப்பிடுவதுடன் இதற்குப்பின்னால் புலம்பெயர் புலிகளினதும் அரசியல் வேடம் பூண்ட புலிகளதும் பின்னணியில் அதிகாரிகள் செயற்படுவதாக எண்ணத்தோன்றுகின்றது என குறிப்பிடுகின்றார். 

இதேவேளை 1969ம் ஆண்டு மத்திய தர வகுப்பாளர்களுக்கான காணி அனுமதி திட்டத்தின்கீழ் (எம்.சி.சி) மாங்கேணி பகுதியில் நாணயக்கார என்ற சிங்கள சகோதர இனத்தவருக்கு வழங்கப்பட்ட 30 ஏக்கர் குத்தகை காணியினை எவ்வித நிர்வாக நடைமுறையும் பேணாமல் தமிழ் சகோதர சமூகத்தை குடியமர்த்த மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சி தெளிவான இனச்சுத்திகரிப்பு முயற்சி என பாதிப்படைந்தவர்கள் கருதுகின்றனர். 

இதேபோன்று குகணேசபுரம் என யுத்தம் முடிவடைந்த பின்னர் வாகரைப்பிரதேச செயலக பிரிவிற்கு வெளியில் வசித்த மக்களை கொண்டு வந்து திட்டமிட்டு குடியேற்றத்த்தை ஏற்படுத்தியுள்ளபோதும் குறித்த பகுதியில் முஸ்லீம் ஒருவருக்கு சொந்தமான காணியினை அரச காணியென வழக்கு தொடர்ந்து வன இலாகாவுக்கான காணியென முத்திரை குத்தி இனச்சுத்திகரிப்பு செய்யும் நடவடிக்கை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

ஏனெனில் குறித்த முஸ்லீம் நபருக்கு சொந்தமான காணியின் மூன்று பக்கங்களும் தமிழ் சகோதரர்கள் காணிகளை எல்லையிட்டு உள்ளனர். குறித்த காணிக்கு பத்து மீற்றர் தூரத்தில் கோவிலுக்கான காணி வழங்கப்பட்டு கோவிலும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தமிழ் சகோதரர்கள் குடியேறுவது, கோவில் கட்டுவதனையோ முஸ்லிம்கள் ஒருபோதும் எதிர்க்கவோ சட்ட சிக்கலுக்குள்ளாக்கவோ இல்லை. 

ஆனால் அதிகாரிகள் தமது அதிகாரத்தை பயன்படுத்தி இத்தகைய மிலேச்சத்தனமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அப்பாவி தமிழ் முஸ்லீம் மக்களுக்கிடையில் வீணான இனமுருகளை ஏற்படுத்த வாய்ப்பாக அமைகின்றது. இவ்வாறு பல நூறு உதாரணங்களை குறிப்பிட்டு கூற முடியும்.

மாவட்ட செயலாளரின் ஒருதலைப்பட்சமான தீர்மானம்.
குறித்த பிரதேச சபைக்கென அத்துமீறி பிடிக்கப்பட்ட காணியினை அரச காணியென தீர்மானத்தை நேற்று 2018.02.26ம் திகதி எவ்வித விசாரணையும் இல்லாமல் மாவட்ட செயலாளர் குறிப்பிடுவது பாதிப்படைந்த மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய மாவட்ட செயலாளர் பதவி ஏற்ற பின்னரும் இத்தகைய இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை குறித்து தீர்க்கமாக ஆராய்ந்து தீர்வுகள் எட்டப்படாமை முஸ்லீம் சமூகத்தரப்பில் நம்பிக்கையீனத்தை தோற்றுவித்துள்ளது. 

காரமுனை முஸ்லீம் பூர்வீக கிராம மக்களின் மீள் குடியேற்றம் பூரணத்துவம் இல்லாத நிலையில், மதுரங்கேணி முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கான வயல் நிலங்களை இழந்து பூரணமாக மீள்குடியேற்றப்படாத நிலையில் காரமுனையில் இருந்து இடம்பெயர்ந்த தமிழர்கள் என்ற போலியான பெயர்ப்பட்டியல் ஒன்றினை குறித்த செயலகத்தினூடாக தயார் படுத்தப்பட்டு வருவதாக வெளியாகும் உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் அரச அதிபரின் எதிர்கால அரசியல் பிரவேசத்துக்கான மறைமுக நிகழ்ச்சி நிரல் என குறிப்பிடப்படும் கதையாடல்களுக்கு உண்மை சேர்ப்பதாக அமைந்துவிடக்கூடாது. 

எனவே வாகரைப்பிரதேச முஸ்லிம்களது மீள் குடியேற்றம் தொடர்பில் பூரண விசாரணை மேற்கொள்ளப்படுவதுடன் தற்போதைய காணி அத்து மீறல்கள் தொடர்பில் பூரண விசாரணை ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.

மாவட்ட முஸ்லீம் அரசியல் வாதிகளின் கையாலாகாத்தனம்.
நேற்றைய மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் முஸ்லிம்களது காணிகள் தொடர்பான ஒரு தலைப்பட்சமான முடிவுகள் எட்டப்படுகின்றபோது முஸ்லீம் அரசியல் பினாமிகள் என மக்கள் கருதும் இவர்கள் கொழும்பில் அமைச்சுப்பதவிகளுக்கும், உயர்பதவிகளுக்கும் பிச்சைப்பாத்திரம் ஏந்தி நின்றமை சமூகத்துரோகமாகும் என மக்கள் கருதுகின்றனர். 

மாவட்டத்தில் காணப்படும் முஸ்லிம்களது காணிப்பிரச்சினையை வெறுமனே தேர்தல் கால வாக்கு வேட்டை ஆயுதமாக பயன்படுத்திக்கொண்டு நயவஞ்சக அரசியல் மேற்கொள்வது வெட்கிக்க வேண்டியுள்ளது. குறைந்தது மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைமை, இணைத்தலைமை, என பதவிகளுக்கு சண்டைபோடும் இவர்கள் முஸ்லீம், சிங்கள மக்களது மீள் குடியேற்றம், காணிப்பிரச்சினை தொடர்பில் குறைந்தது ஒரு சுயாதீன விசாரணைக்குழுவினையாவது தமது அதிகாரங்களை பயன்படுத்தி அமைக்க முடியவில்லை என்ற கையாலாகாத்தனத்தை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

நல்லாட்ச்சி அரசு இனச்சுத்திகரிப்பு விடயத்தில் தீர்வினை பெற்றுத்தருமா
தற்போதைய நல்லாட்ச்சி என கூறப்படும் அரசை அமைக்க முஸ்லிம்களது பங்களிப்பு அளப்பரியதே. ஆனால் மாவட்டத்தில் குறிப்பாக வாகரைப்பிரதேச செயலகப்பிரிவில் திட்டமிட்ட அதிகாரப்பயங்கரவாதத்தினால் மேற்கொள்ளப்படும் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை குறித்து விசாரணைக்குழுவாவது அமைக்கப்பட்டவேண்டும்.

இறுதியாக இதுவிடயத்தில் முஸ்லீம் சிவில் சமூகம் பலமான கட்டமைப்பினை ஏற்படுத்தி சோரம்போகாத புதிய அரசியல் தலைமைகளை உருவாக்க முனையவேண்டும்.அத்தோடு முஸ்லீம் சமூக நீதித்துறை சார்ந்தவர்கள் சட்டரீதியான தீர்வினை பெற்றுக்கொள்ள சமூக ஆர்வல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ் புத்திஜீவிகள் இதுவிடயத்தில் மனிதாபிமானத்துடன் தீர்மானங்களை எட்ட முயற்சிப்பது வளர்ந்துவரும் தமிழ் முஸ்லீம் உறவினை பலப்படுத்த வாய்ப்பாக அமையும்.

No comments:

Post a Comment