மட்டக்களப்பில் வடிகான் நீருக்குள் மூழ்கிய முஸ்லிம் மாணவியொருவரை தமிழ் மாணவிகளும் பெற்றோரும் காப்பாற்றிய சம்பவமொன்று 27.2.2018 செவ்வாய்க்கிழமை இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது செவ்வாய்க்கிழமை பெய்த கடும் மழை காரணமாக மட்டக்களப்பிலுள்ள பிரபல்யமான பெண்கள் பாடசாலையொன்றிற்கு முன்னாலுள்ள வடிகான் வெள்ள நீரால் நிரம்பி வடிகான் தெரியாதளவுக்கு அதற்கு மேலால் வெள்ளம் காணப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மதியம் பாடசாலை விட்ட நிலையில் மாணவிகள் பாடசாலையில் இருந்து வெளியேறி வீடுகளுக்கு செல்வதற்காக வீதிக்கு வந்த போது அங்கு கல்வி கற்கும் காத்தான்குடியைச் சேர்ந்த முஸ்லிம் மாணவியொருவர் குறித்த வடிகான் நீருக்குள் மூழ்கி வெளியே வரமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்ததை கண்ட குறித்த பாடசாலையின் தமிழ் மாணவிகளும் அங்கு நின்ற தமிழ் பெற்றார்கள் சிலரும் குறித்த மாணவியை நீரில் இருந்து வெளியே எடுத்துள்ளனர்.
வடிகான் மூடிகளை உடனேயே அப்புறப்படுத்தி அந்த மாணவியை வெள்ளத்திலிருந்து மீட்டதுடன் ஒரு சில நிமிட நேரம் இன்னும் தாமதமாகியிருந்தால் குறித்த மாணவியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்க கூடும் எனவும் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த மாணவியொருவர் தெரிவித்தார்.
வடிகான் மூடிகளில் கால் போகும் அளவுக்கு இடைவெளி இருந்துள்ளதுடன் வடிகானை மறைத்து வெள்ளம் காணப்பட்டதால் குறித்த மாணவி தெரியாமல் காலை அதற்குள் வைக்கவே அந்த வெள்ள நீருக்குள் மாணவி மூழ்கியதாகவும் தெரிய வருகின்றது.
எம்.எஸ்.எம்.நூர்தீன்
No comments:
Post a Comment