உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக விண்ணப்பித்த பதவிநிலை அல்லாத அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் சம்பளமற்ற விடுமுறையை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு விசேட சுற்று நிருபமொன்றை வெளியிட்டுள்ளது.
சகல திணைக்களத் தலைவர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு இது தொடர்பிலான விசேட சுற்று நிருபமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முஹம்மட் தெரிவித்தார்.
பொதுநிருவாக அமைச்சின் 32/2017 ஆம் இலக்க சுற்றறிக்கையின்படி இரண்டாம் நிலை மட்டமாக கணிக்கப்பட்டுள்ள முகாமைத்துவ உதவியாளர், கண்காணிப்பு முகாமைத்துவ உதவியாளர், இணைந்த அலுவலர், இலங்கை ஆசிரியர் சேவை, தாதிச் சேவை உள்ளிட்டோர் பதவி நிலை உத்தியோகத்தர்கள் அல்லாதவர்கள் என தாபன பணிப்பாளர் நாயகம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதையடுத்து இவ்வாறானவர்களுக்கு சம்பளமற்ற விடுமுறையினை வழங்குமாறு விசேட சுற்று நிருபம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்திற்கமைய 01.06.2007 ஆம் ஆண்டு 18940 ரூபா அடிப்படைச் சம்பளமாக கொண்ட உத்தியோகத்தர்களுக்கு தேர்தலில் வேட்பாளர்களாக நிற்க முடியாது என அறிவிக்கப்பட்டதற்கு அமைய உள்ளூராட்சித் தேர்தலுக்கான சம்பளமற்ற விடுமுறை மறுக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சம்பளமற்ற விடுமுறையை வழங்குமாறும் சகல திணைக்களத் தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முகாமைத்துவ உதவியாளர் அதி உயர்தரம், இலங்கை அதிபர் சேவை, தாதிச் சேவை அதி உயர்தரம், வெளிக்கள அலுவலர்கள் ஆகியோருக்கு தேர்தலில் வேட்பாளராக போட்டியிட முடியாது எனவும் இவ்வாறானவர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்கப்படமாட்டாது எனவும் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அரசியல் உரிமையுள்ள ஆசிரியர்களுக்கு தேர்தலுக்கான வேட்பாளர் சம்பளமற்ற விடுமுறை மறுக்கப்பட்டமை தொடர்பாக நிறுவன பணிப்பாளர் நாயகத்திடம் இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் முறையிட்டதுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தெளிவுபடுத்துமாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment