அதிர்ந்தது பாராளுமன்றம் ! "வெளியில் வா நான் யாரென காட்டுகிறேன்" - சமல் ராஜபக்ஷ, சரத் பொன்சேகாவிற்கு இடையில் வாக்குவாதம் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 8, 2021

அதிர்ந்தது பாராளுமன்றம் ! "வெளியில் வா நான் யாரென காட்டுகிறேன்" - சமல் ராஜபக்ஷ, சரத் பொன்சேகாவிற்கு இடையில் வாக்குவாதம்

ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை பரிபோனமை குறித்து சபையில் ஏற்பட்ட வாக்குவாதம் இறுதியில் அமைச்சர் சமல் ராஜபக்ஷவிற்கும், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவிற்கு இடையிலான வார்த்தை மோதலாக மாறியது.

தகாத வார்த்தைப் பிரயோகங்களையும், எச்சரிக்கை தொனியிலான கருத்துக்களையும் ஆளும் - எதிர்கட்சியினர் முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சபை அமர்வுகள் அரை மணி நேரம் சூடுபிடித்தன .

ஆளும் கட்சி உறுப்பினர்கள் சபை நடுவே குதித்து சபை அமர்வுகளை தடுத்ததால் சபை 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய வேளையில், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குறித்த அறிவிப்பொன்றை சபாநாயகர் விடுத்தார்

இதன்போது "அரசியலமைப்பின் பிரகாரமும் மேல் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலுமே ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளது. இவ்விடயத்திற்கும் அவரின் பாராளுமன்ற விடுமுறை கோரலுக்கும் எதுவிதமான தொடர்பு கிடையாது.

அதேபோல் அரசியலமைப்பின்படி எடுக்கப்பட்ட இந்த முடிவு தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தை கேள்விக்கு உற்படுத்த முடியாது. எனவே ரஞ்சன் ராமநாயக்க விடயத்தில் அடிப்படையற்ற கருத்துக்களை எதிர்க்கட்சித் தலைவர் முன்வைக்க கூடாது என சபாநாயகர் அறிவித்தார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ரஞ்சன் ராமநாயகவின் பாராளுமன்ற உறுப்புரிமை விடயத்தில் நாம் மேன்முறையீடு செய்யவுள்ளோம். உயர் நீதிமன்றத்தில் எவ்வாறான தீர்ப்பு வழங்கப்பட்டாலும் அதனை நாம் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளோம்.

ஆனால் அதுவரையில் அவரது பாராளுமன்ற உறுப்புரிமையை பறிக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டாம். ரஞ்சன் ராமநாயக்கவின் விடயத்தில் ஏன் நீங்கள் இவ்வாறு அவசரப்படுகின்றீர்கள்? உண்மையில் ரஞ்சன் ராமநாயக்கவின் விடயத்தில் சூழ்ச்சி ஒன்று இடம்பெறுகின்றது என்றார்

இதேவேளை ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய சரத் பொன்சேகா எம்.பி இந்த சபையில் கதைகளை கேட்டுக் கொண்டு இருக்கும் போது கடந்த கால சம்பவங்கள் எனக்கு நினைவிற்கு வருகின்றது. கடந்த 2010-2015 அரசாங்கம் எவ்வாறு தவறாகவும், கீழ்த்தரமாகவும் என்னை நடத்தினார்கள் என்றார்.

இதன்போது அமைச்சர் சமல் கூறுகையில் "நீங்கள் பாராளுமன்றத்திற்கு வருவதற்கான அனுமதியை நானே வழங்கினேன், உங்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை அவதானித்து காரணிகளை ஆராய்ந்தே நடவடிக்கை எடுத்தேன். தெரியாததைப்போல் கேட்கின்றீர்கள். உங்களை சபைக்கு அனுமதிக்கவில்லையா என கூறுங்கள்" என்றார்.

இந்நிலையில் எதிர்த்தரப்பில் இருந்த பொன்சேகா எம்.பி "நான் கூறுவதை கேளுங்கள்" என்றார்.

ஆவேசமடைந்த அமைச்சர் சமல், நான் எதனை கேட்க வேண்டும், உனது வீரத்தை என்னிடம் காட்ட வேண்டாம். நீ ஒரு கழுதை என ஆவேசப்பட்ட வேளையில் அமைச்சர் சமல் ராஜபக்ஷவிற்கும், சரத் பொன்சேகா எம்.பிக்கும் இடையில் தகாத வார்த்தை பரிமாற்றத்தால் வாக்குவாதம் ஏற்பட்டது.

சரத் பொன்சேகாவின் வார்த்தை பிரயோகங்கள் கடுமையாக இருந்த நேரத்தில் "வெளியில் வா நான் யாரென காட்டுகிறேன்" என அமைச்சர் சமல் எச்சரிக்கை விடுத்தார்.

கேசரி

No comments:

Post a Comment