(எம்.மனோசித்ரா)
நல்லாட்சி அரசாங்கத்தில் காணப்பட்ட குறைபாடுகளின் காரணமாக நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்காக புதியதொரு அரசாங்கத்தை தோற்றுவித்த போதிலும், தமது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என்று ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
ஸ்ரீஜயவர்தனபுரி ஜயசேகரராம விகாரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தேரர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், கடந்த அரசாங்கத்தில் காணப்பட்ட குறைபாடுகளின் காரணமாகவே நாட்டில் சிறந்த எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு புதிய அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்டது. எனினும் இதன் மூலம் எமது எதிர்பார்ப்புக்கள் நிறைப்படும் என்று தோன்றவில்லை.
நாளாந்தம் வெளியாகும் கவலைக்குரிய செயற்பாடுகள், குறிப்பாக சுற்றுச் சூழல் அழிவு, தேசிய சொத்துக்கள் அழிக்கப்படல், நெதர்லாந்தைச் சேர்ந்த தேரரின் திடீர் மரணம் போன்றவை அதிருப்தியளிக்கின்றன. இவற்றுக்கு கீழ் காணப்படும் சதித்திட்டம் என்ன என்பதை குறித்து எமக்கு தெரியாது.
கடந்த அரசாங்கத்திலும் தற்போதைய அரசாங்கத்திலும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில் எவ்வித மாற்றமும் இல்லை. 'நீங்கள் என்னைக் காப்பாற்றுங்கள், நாம் உங்களை காப்பாற்றுகின்றோம்.' என்பதே அரசியல் என தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
துரதிஸ்டவசமான இந்த இடைவெளியை நிரப்புவதற்கு பொறுத்தமான பலமான அரசியல் சக்தி தற்போது நாட்டில் இல்லை. நாம் குற்றவாளிகளை கண்டறிவோம் என்று கூறுவது சிறந்த விடயமாகும். இந்த பொய் பிரசாரத்தை முன்னெடுத்தே பலரும் மாறி மாறி அதிகாரத்தை கைப்பற்றுகின்றனர்.
அதிகாரத்தை கைப்பற்றியதன் பின்னர் ஒவ்வொருவரும் தம்மை பாதுகாத்துக் கொள்வதோடு, அதிகாரம் கிடைப்பதற்கு காரணமாகவிருந்த மோசடிக்கார்களையும் பாதுகாத்துக் கொள்ளும் செயற்பாடே தற்போது இடம்பெறுகிறது என்றார்.
No comments:
Post a Comment