கொவிட் 19 வைரஸ் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு சான்றிதழைப் பெற்றுக் கொடுக்கும் வரை விமான நிலையத்தை திறக்க முடியாதென சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நேற்று கம்பஹா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், கொவிட் 19 வைரஸ் இலங்கையில் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு சான்றிதழைப் பெற்றுக்கொடுக்கும் வரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை திறக்க முடியாது. என்றாலும் விமான நிலையத்தை திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதற்கான சுகாதார வழிகாட்டல்கள் குறித்து முக்கிய அவதானத்தை செலுத்தியுள்ளோம்.
நாட்டு மக்களை அனர்த்தங்களுக்குள் தள்ள முடியாது. அதேபோன்று வெளிநாடுகளில் நிர்க்கதியாகியுள்ள இலங்கைப் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்துவராமலும் இருக்க முடியாது. இவை அனைத்தையும் மதிப்பிட்டே பணிகளை முன்னெடுத்துச் செல்கிறோம்.
கொவிட் 19 வைரஸை எக்காரணம் கொண்டும் நாட்டுக்குள் உள்நுழைய அனுமதிக்க முடியாது. விமான நிலையத்தை திறப்பதற்கான சிபாரிசுகளை அமைச்சரவையில் நான் முன்வைத்துள்ளேன.
எமது சிபாரிசுகளுக்கான பதிலை சுகாதார அமைச்சிடமிருந்து எதிர்பார்க்கின்றோம். அதன் பிரகாரம் கட்டுநாயக்க மற்றும் மத்தல விமானத்தை திறக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
No comments:
Post a Comment