லோரன்ஸ் செல்வநாயகம்
மாகாண சபைகள் மற்றும் நகர சபை, பிரதேச சபைகள் உள்ளிட்ட உள்ளூராட்சி சபை நிறுவனங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் கடந்த காலங்களில் காணாமற் போயுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு காணாமற் போன வாகனங்கள் தொடர்பில் தகவல்களைக் கூட அறிந்து கொள்வதற்கு முடியாதுள்ளதாகவும் தெரிவித்துள்ள அந்த அமைச்சு சில வாகனங்கள் உதிரிப்பாகங்களாக கழற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகம் நிலவுவதாகவும் தெரிவிக்கின்றது.
அது தொடர்பில் தெரிவித்துள்ள பொது நிர்வாக, உள்நாட்டு மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் சந்தன அபேரத்ன மேற்படி வாகனங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சு மட்டத்தில் இரகசிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள தாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாட்டில் எங்காவது இத்தகைய வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தால் அவற்றை அமைச்சிடம் ஒப்படைக்குமாறு பொது வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு வாகனங்களை ஒப்படைக்காமல் உள்ளோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவ்வாறு அவர்களை கைது செய்தால் அந்த வாகனங்களை தம் வசம் வைத்துள்ளவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இவ்வாறு உள்ளுராட்சி சபைகளில் காணாமற்போயுள்ள வாகனங்கள் தொடர்பில் கணக்காய்வுப் பிரிவும் தனியான விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
கடந்த காலங்களில் உள்ளூராட்சி சபைகளில் முறையற்ற விதத்தில் வாகனங்கள் உபயோகிக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்களிலிருந்து தெரிய வருவதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர், நிறுவனங்களின் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டிருந்த வாகனங்கள் பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் தமக்கு வேண்டியவர்களுக்கு வழங்கப்பட்டு சாதாரணமானவர்கள் அதனை உபயோகித்துள்ளமை தொடர்பில் விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment