மொனராகலையில் தணமல்வில கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் பாடசாலைக்குள் வெளிநாட்டு சிகரட்டுகளை விற்பனை செய்வதாக தணமல்வில பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது, தணமல்வில கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் 11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் ஏனைய மாணவர்களுக்கு வெளிநாட்டு சிகரட்டுகளை விற்பனை செய்வதாக அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் பாடசாலை அதிபரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பாடசாலை அதிபர், சந்தேகநபரான மாணவனை அழைத்து சோதனையிட்டுள்ளார். இதன்போது சந்தேகநபரான மாணவனிடமிருந்து வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து பாடசாலை அதிபர் இது தொடர்பில் தணமல்வில பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாரால் நடத்தப்பட்ட விசாரணைகளில், சந்தேகநபரான மாணவன் சூரியவெவ பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றில் இருந்து இந்த வெளிநாட்டு சிகரட்டுகள் கொள்வனவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சூரியவெவ பிரதேசத்தில் உள்ள கடையின் உரிமையாளரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், கடை உரிமையாளர் சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் பல தடவைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக
கடை உரிமையாளர் சந்தேகநபரான மாணவனுக்கு 100 ரூபாய்க்கு சிகரட்டுகளை விற்பனை செய்துள்ள நிலையில் சந்தேகநபரான மாணவன் அதனை பாடசாலைக்குள் 200 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் சந்தேகநபரான கடையின் உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தணமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment