(எம்.மனோசித்ரா)
போதைப் பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்களை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கொள்கலன்களின் உரிமையாளர்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் புகைப்படங்கள் எமக்கு கிடைத்துள்ளன. இந்த அரசியல்வாதிகளே போதைப் பொருள் விநியோக சங்கிலியின் பின்னால் உள்ளனர். இது தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவர்கள் தராதரமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
ஹோமகமவில் சனிக்கிழமை (06) இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், போதைப் பொருள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்களை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கொள்கலன்களின் உரிமையாளர்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளே இந்த புகைப்படங்களில் உள்ளனர். இவற்றின் ஊடாக போதைப் பொருள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டிருந்தால் முழு நாடும் சீரழிவதற்கு அது வழிவகுத்திருக்கும்.
போதைப் பொருள் கடத்தல்காரர்கள், அவர்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள், பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவர்களை இனங்காண்பதற்கு சிறந்த சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.
துப்பாக்கிச் சூடுகள் இடம்பெறும் அந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர்களை கைது செய்ய முடியாவிட்டாலும், அதன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் ஊடாக பெரும்பாலான சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் திணைக்களமும், இராணுவமும் இணைந்து முன்னெடுக்கும் இந்த சுற்றிவளைப்புக்களின் மூலம் பல குற்றங்கள் இடம்பெற முன்னரே அவற்றை தடுக்க முடிந்துள்ளது. ஜனாதிபதியும் இதனை கடுமையாக வலியுறுத்திக் குறிப்பிட்டிருந்தார்.
கொழும்பு மாவட்டத்தில் போதைப் பொருள் தொடர்பான கலந்துரையாடல்கள் பிரதமர் தலைமையில் பிரத்தியேகமாக இடம்பெற்று வருகின்றன. மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்துக்கு அப்பால் அந்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைளின்போது முதலில் விநியோக சங்கிலி இல்லாதொழிக்கப்பட வேண்டும். முப்படையினர் பொலிஸார் இணைந்து அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் போதைப் பொருள் தயாரிப்புக்கு தேவையான இரசாயன மூலப்பொருள் அடங்கிய கொள்கலன்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றின் உரிமையாளர்களுடன் உள்ள சில அரசியல்வாதிகளின் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய தராதரமின்றி அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.
விசாரணைகளுக்காக சிலரைத் தேடும்போது அவர்கள் பட்டப்படிப்பிற்காக சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிலர் சுகயீனமுற்று வெளிநாடுகளுக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. யார் எங்கிருந்தாலும் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.
No comments:
Post a Comment