தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி உயிரிழந்த நிலையில் இன்று (28) காலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட நபர் நீர்கொழும்பைச் சேர்ந்த 60 வயதான W.M.A. சரத் அந்தோனி என தெரிய வந்துள்ளது.
தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி இன்று காலை பயணித்த குறித்த ரயில் காலை சௌத் பார் புகையிரத நிலையத்தில் தரித்து நின்று மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கி பயணித்துள்ளது.
இதன் போது சௌத்பார் -தள்ளாடி புகையிரத வீதி, இரட்டை கண் பாலத்திற்கு அருகில் ரயிலில் மோதி உடல் பாகங்கள் சிதறிய நிலையில் குறித்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த திடீர் மரண விசாரணை அதிகாரி பி.பிரபா நந்தன் சடலத்தை பார்வையிட்டார்.
இதன் போது அவரது உடமையில் இருந்து மீட்கப்பட்ட தேசிய அடையாள அட்டை,சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியவற்றை வைத்து குறித்த நபர் W.M.A. சரத் அந்தோனி எனவும் நீர்கொழும்பைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டது.
அவரது உடைமையில் இருந்து ஒரு தொகை பணம் மற்றும் ,நேற்று (27) திகதியிடப்பட்ட தலைமன்னாருக்கு என பெற்றுக்கொள்ளப்பட்ட ரூ. 205 இற்கான ரயில் டிக்கெட் ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம் மன்னார் பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மன்னார் வைத்தியசாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment