இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் தொடர்பான தீர்மானம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இன்று (09) பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் தொடர்பான தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் தீர்மானத்துக்கு ஆதரவாக 163 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், எதிராக எந்த வாக்குகளும் அளிக்கப்படவில்லை. அதற்கமைய, இந்தத் தீர்மானம் மூன்றில் இரண்டு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
2025.08.01 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம் முதலீடுகளை மேம்படுத்துதல் மற்றும் பரஸ்பர பாதுகாப்பு குறித்து இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசிற்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையில் 2025 பெப்ரவரி 12 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.
அதற்கமைய, இது ஐக்கிய அரபு இராச்சியத்தின் மக்களால் அல்லது அந்நாட்டின் சட்டங்களின் கீழ் நிறுவப்பட்ட அல்லது அமைக்கப்பட்ட கூட்டுத்தாபனங்கள், நிறுவனங்கள் அல்லது எனைய அமைப்புக்களால் இலங்கையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்குமான ஓர் ஒப்பந்தம் ஆகும்.
இலங்கையின் அரசியலமைப்பின் 157 வது பிரிவுக்கு அமைய, இத்தீர்மானம் ஆதரவாக வாக்களிப்போரில் மூன்றில் இரண்டிற்கு குறையாதவாறு அங்கீகரிக்கப்படல் வேண்டும் என்பதுடன், அதற்கமைய தீர்மானம் மீதான விவாதத்தை அடுத்து பி.ப. 5.00 மணி அளவில் வாக்கெடுப்பு இடம்பெற்றது.
.png)
No comments:
Post a Comment