(லியோ நிரோஷ தர்ஷன்)
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 6 ஆம் திகதி சனிக்கிழமை ஜெனிவா செல்கிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 வது அமர்வில், கடந்த கால மனித உரிமை மீறல்கள் குறித்த பொறுப்புக்கூறல் விவகாரத்தில் அரசாங்கம் மேலும் கால அவகாசத்தை கோரவுள்ளது.
இந்த கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில், அடுத்த வருடம் வடக்கு மற்றும் கிழக்கில் மாகாண சபை தேர்தல்களை நடத்தி, அங்கு சிவில் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான நிலைப்பாட்டை இலங்கை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ, மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இலங்கைக்கான கேந்திரியக் குழு (Core Group on Sri Lanka) ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் செப்டம்பர் அமர்வில் ஒரு புதிய தீர்மானத்தை முன்வைக்கவுள்ளது. இந்த புதிய தீர்மானம், ஏற்கனவே உள்ள தீர்மானங்களை விட, மென்மையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் என இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்களை இந்த தீர்மானம் அங்கீகரிக்கும். இருப்பினும், கடந்த கால மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலின் முக்கியத்துவத்தை புதிய தீர்மானம் தொடர்ந்து வலியுறுத்தும் என அரச தரப்பு தகவல்கள் கூறுகின்றன.
51/1 தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட்டம் (Sri Lanka Accountability Project) என்ற பொறிமுறையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதே இதன் பிரதான நோக்கமாக இருக்கும்.
மேலும் இந்த புதிய தீர்மானத்தை நேரடியாக பேச்சுவார்த்தை மூலம் எதிர்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத், பன்னாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து, பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசாங்கத்தின் முழுமையான ஈடுபாட்டை உறுதிப்படுத்தவுள்ளார்.
செப்டம்பர் 8ஆம் திகதி அமர்வு தொடங்கும்போது, ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் இலங்கை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அவர் இலங்கைக்கு மேற்கொண்ட சமீபத்திய விஜயத்தின் அடிப்படையிலான இந்த அறிக்கை, புதிய பரிந்துரைகளை உள்ளடக்கியிருக்கும். அதன் பின்னர், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அறிவிப்பார்.
எவ்வாறாயினும் அரசாங்கம், இந்த புதிய தீர்மானத்தை கடுமையாக எதிர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், உள்நாட்டுப் பொறுப்புக்கூறல் மற்றும் மாகாண சபை தேர்தல்கள் குறித்த தனது உறுதியான வாக்குறுதிகளையும் வலியுறுத்த உள்ளது.
மனித உரிமைகளை பாதுகாப்பதிலும், கடந்தகால விடயங்களில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதிலும் முழு அளவிலான ஈடுபாட்டுடன் செயல்படுவதற்கு கால அவகாசம் அத்தியாவசியமானது என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் முன்வைக்க உத்தேசித்துள்ளது.
எனவே இந்த அமர்வு, இலங்கைக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இடையிலான உறவில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமையக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment