(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)
காணி பிரச்சினைக்கு என்ன தீர்வினை அரசாங்கம் வழங்கியுள்ளது. பலாலி மற்றும் மயிலிட்டி இராணுவ முகாமுக்குள் இருந்த இரண்டு கத்தோலிக்க தேவாலயங்கள் உடைக்கப்பட்டுள்ளன. மயிலிட்டி காணிக்கை மாதா தேவாலயம், பலாலி புனித செபஸ்டியன் தேவாலயம் உடைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அப்பகுதியில் பிள்ளையார் கோவில் உடைக்கப்பட்டுள்ளது. காணி விடுவிப்புக்கான கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்ற நிலையில் யாழ். தையிட்டி பகுதியில் தனியார் காணியில் போராட்டத்துக்கு மத்தியில் விகாரை ஒன்று கட்டப்பட்டுள்ளது. நீதி எங்கு செயற்படுத்தப்படுகிறது. எம்மை இனவாதிகள் என்று விமர்சித்துக் கொண்டு தொடர்ந்து ஆட்சியில் இருக்க முயற்சிக்காதீர்கள். எம்மக்கள் உண்மையை தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற அமர்வின்போது வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் வாழ் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பான விசேட சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க உரையாற்றுகையில் இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையின் விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தார். அரசாங்கம் குறிப்பிடுவதை ஏற்காவிடின் ஆணையாளரின் அறிக்கையை பாருங்கள் என்று குறிப்பிட்டார். ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையை சபை முதல்வர் திரிபுபடுத்தி சபையில் விடயங்களை முன்வைத்தார்.
பொய்யை மாத்திரம் முன்னிலைப்படுத்தி செயற்படும் அரசாங்கம் இவ்வாறு திரிபுபடுத்தி பேசுவது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல. ஆணையாளரின் அறிக்கையில் 2 மற்றும் 3ஆம் பக்கத்தில் 'அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாகவும், அதற்கு மாற்றீடாக பிறிதொரு சட்டத்தை கொண்டு வரப்போவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தது. இருப்பினும் பயங்கரவாத தடைச் சட்டம் தற்போதும் பயன்பாட்டில் உள்ளது. அத்துடன் மாற்றீடு சட்டத்துக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சபை முதல்வர் இதனை பார்க்கவில்லையா?
பெருந்தோட்ட பகுதிகளில் ஏழ்மை தீவிரமடைந்துள்ளது. மலையக மக்களுக்கு 2138 ரூபாய் சம்பளம் வழங்குவதாக தேசிய மக்கள் சக்தி வாக்குறுதி அளித்தது. கடந்த அரசாங்கம் 1350 ரூபாய் சம்பளம் தொடர்பான தீர்மானத்தை கொண்டுவந்தபோது தேசிய மக்கள் சக்தியின் 3 உறுப்பினர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். இன்று 2000 ரூபாய் பற்றி எவ்வித முன்னேற்றமும் இல்லை.
ஆகவே பெருந்தோட்ட மக்கள் பற்றி ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிட்ட விடயங்களை பாருங்கள். சபை முதல்வர் குறிப்பிடுவதை போன்று ஆணையாளரின் அறிக்கையில் பயங்கரவாத தடைச் சட்டம், பெருந்தோட்ட மக்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்.
ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறை பற்றி ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழன் பத்திரிகையின் ஆசிரியர் சிவராஜாவின் தாயாருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பத்திரிகை ஆசிரியர் சிவராஜா கொழும்பில் உள்ளார். ஊரில் உள்ள அவரது தாயாரிடம் 'உங்களின் மகனின் பேஸ்புக் பக்கத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவரை கவனமாக இருக்க சொல்லுங்கள்' என்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஊடகவியலாளர் குமணன் டி.ஐ.டியால் விசாரிக்கப்பட்டுள்ளார். விசாரணையின்போது கேட்கப்பட்ட விடயங்களை வெளியில் சொல்ல வேண்டாம் அவ்வாறு சொன்னால் பார்த்துக் கொள்கிறோம்' என்று குமணனுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் தமக்கு ஆதரவளித்துள்ளார்கள் என்று சபை முதல்வர் குறிப்பிடுகிறார். மக்களாணை பொதுத் தேர்தலுடன் முடிவடைந்துவிட்டது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கில் தோல்வியடைந்துள்ளீர்கள்.
டக்ளஸ் தேவானந்தாவுடன் ஒன்றிணைந்து நாங்கள் எந்த அதிகார சபைகளிலும் ஆட்சியமைக்கவில்லை. ஆனால் நீங்கள் பிள்ளையானுடன் ஒன்றிணைந்து மட்டக்களப்பில் ஆட்சி அமைத்துள்ளீர்கள். வெட்கம் என்பதொன்று இல்லையா உங்களுக்கு பிள்ளையானுடன் ஒன்றிணைந்து வாகரை பிரதேச சபையில் ஆட்சி அமைத்துள்ள கட்சி நீங்கள் வெட்கமடையுங்கள்.
எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, ஜீவன் தொண்டமான், ரிசாட் பதியூதீன் ஆகியோரை விமர்சித்தீர்கள். ஆனால் அவர்களுடன் ஒன்றிணைந்து ஆட்சியமைத்துள்ளீர்கள். வெட்கம் என்பது இல்லையா?
தேசிய உரிமையை கோரும் எம்மை இனவாதிகள் என்று விமர்சிக்கும் நீங்கள்தான் உண்மையான இனவாதிகள். ஆகவே கண்ணாடி அறையில் இருந்துகொண்டு கல்லெறியாதீர்கள்.
காணி பிரச்சினைக்கு என்ன தீர்வு வழங்கியுள்ளீர்கள். பலாலி மற்றும் மயிலிட்டி இராணுவ முகாமுக்குள் இருந்த இரண்டு கத்தோலிக்க தேவாலயங்கள் உடைக்கப்பட்டுள்ளன. மயிலிட்டி காணிக்கை மாதா தேவாலயம், பலாலி புனித செபஸ்டியன் தேவாலயம் உடைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அப்பகுதியில் பிள்ளையார் கோவில் உடைக்கப்பட்டுள்ளது.
காணி விடுவிப்புக்கான கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்படுன்ற நிலையில் யாழ். தையிட்டி பகுதியில் தனியார் காணியில் போராட்டத்துக்கு மத்தியில் விகாரை ஒன்று கட்டப்பட்டுள்ளது. நீதி எங்கு செயற்படுத்தப்படுகிறது.
எம்மை இனவாதிகள் என்று விமர்சித்துக் கொண்டு தொடர்ந்து ஆட்சியில் இருக்க முயற்சிக்காதீர்கள். எம்மக்கள் உண்மையை தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள் என்றார்.
No comments:
Post a Comment