லலித், குகன் உள்ளிட்ட சம்பவங்களின் விசாரணையை மீள ஆரம்பித்துள்ளோம் : பாராளுமன்றத்தில் தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 8, 2025

லலித், குகன் உள்ளிட்ட சம்பவங்களின் விசாரணையை மீள ஆரம்பித்துள்ளோம் : பாராளுமன்றத்தில் தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

அரசியல் செயற்பாட்டாளர்களான லலித், குகன் உட்பட யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் வடக்கு, கிழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான விசாரணைகளை மீள ஆரம்பித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதன்படி வடக்கு, கிழக்கில் யுத்தத்தின் பின்னர் இடம்பெற்ற 4 காணாமல்போன சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினாலும், 6 சம்பவங்கள் தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவினாலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன், அந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவு பெறவில்லை என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (08) வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் தேசிய மக்கள் சக்தி (NPP) தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது கேள்வி எழுப்பிய நஜித் இந்திக, தற்போதைய ஜனாதிபதியின் நியமனத்தையடுத்து ஏழு குற்றச்செயல்கள் தொடர்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதை ஜனாதிபதி அறிவித்துள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்களா?

அந்த வகையில் 2011 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண பிரதேசத்தில் காணாமலாக்கப்பட்ட லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இரண்டு அரசியல் செயற்பாட்டாளர்கள் காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளின் தற்போதைய முன்னேற்றம் என்ன?

அத்துடன் இலங்கையில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இடம்பெற்ற யுத்தம் முடிவடைந்த பின்னர் இற்றைவரையில் தீர்க்கப்படாத ஏதேனுமொரு காணாமலாக்கப்பட்ட சம்பவம் பற்றிய விசாரணைகள் நிறைவடைந்துள்ளதா?

அதற்கிணங்க மேற்படி காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் தாமதமாக்கப்பட்டமைக்கு அரசியல் தலையீடுகள் காரணமாக அமைந்துள்ளனவா? என கேள்வியெழுப்பியிருந்தார்.

அந்த கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் ஆனந்த விஜேபால, 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  09ஆம் திகதி இடம்பெற்ற லலித் குமார், குகன் முருகானந்தம் ஆகியோர் காணாமற்போன சம்பவம் தொடர்பில் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  11ஆம் திகதி விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பில் 17 சந்தர்ப்பங்களில் அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலதிக அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளார்.

எனினும் இறுதியாக 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்  10ஆம் திகதி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வழக்கை தொடர்ந்தும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிறுத்துவதற்கு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் இல்லாமையினால் பதில் பொலிஸ்மா அதிபரால் 2025 ஆம் ஆண்டு ஜுன் மாதம்  3ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அது தொடர்பில் தேவையான உத்தரவுகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி குற்றவியல் விசாரணை மற்றும் நிதி விசாரணை பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபரால் வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்து இந்த விசாரணைகள் தொடர்பில் சகல ஆவணங்களையும் முன்வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அந்த திணைக்களத்தால் மனிதப் படுகொலை மற்றும் திட்டமிட்ட குற்ற விசாரணைப் பிரிவினால் தற்போது விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment