பலஸ்தீனியர்களின் வேதனையை உணர்வதற்கு பலஸ்தீனியர்களாக இருக்க வேண்டியதில்லை நீங்கள் ஒரு மனிதனாக இருந்தால் போதும் - முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 3, 2025

பலஸ்தீனியர்களின் வேதனையை உணர்வதற்கு பலஸ்தீனியர்களாக இருக்க வேண்டியதில்லை நீங்கள் ஒரு மனிதனாக இருந்தால் போதும் - முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

பலஸ்தீனியர்களின் வேதனையை உணர்வதற்கு பலஸ்தீனியர்களாகவோ முஸ்லிமாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் ஒரு மனிதனாக இருந்தால் மட்டும் போதும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஷாம் நவாஸ் தலைமையில் நடைபெற்ற ஸ்தாபகர் தின நிகழ்வில் உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் தொடர்ந்து பேசிய கருஜயசூரிய மேலும் கூறியதாவது, இன்றைய அமர்வு வைபவ ரீதியானதல்ல. அது ஒரு தலைமுறையை அடிப்படையாகக் கொண்டது. நீங்கள் அடுத்த பரம்பரையை பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள். ஸ்தாபகர்களது நோக்கினை இன்று நீங்கள் கௌரவப்படுத்தி இருக்கிறீர்கள். அவர்கள் தலைவர்கள் மட்டுமல்ல, அவர்கள் அபாயங்களை எதிர்கொள்பவர்கள். பாலங்களை அமைப்பதற்காக உண்மையை சொல்லுபவர்களாக இருக்கிறார்கள். 

இனம் என்பது பிறப்பினால் ஏற்பட்ட ஒரு விபத்து. ஆனால், மனிதத்துவம் என்பது ஒரு தீர்மானமாகும். எனது வாழ்வில் பல தேசங்களின் தலைவர்கள், கண்ணீர் விடுக்கும் தாய்மார்கள், மதகுருமார்கள், இமாம்கள் மற்றும் எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள், ஜனாதிபதிமார்களுடன் பல மேசைகளில் நான் அமர்ந்து பேசி உள்ளேன். எமது சுதந்திரப் போராட்டத்தின் போது முஸ்லிம் தலைவர்கள் காட்டிய நாட்டுப்பற்றும் மற்றும் பொறுமையும் நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.

நாட்டைக் கட்டியெழுப்புவற்கு நீங்கள் உதவியது மட்டுமின்றி, எமது தேசிய தலைவரின் அடையாளத்தை வகுப்பதற்கும் நீங்கள் உதவினீர்கள்.

நண்பர்களே, உலகம் இன்று காஸாவினைப் பார்த்துக் கொண்டிருக்கின்றது. அல்லது பார்க்காதிருக்கின்றது. நாம் உண்மையில் சரியான நேரத்தில் எந்தவொரு தீர்மானமும் எடுக்காமல் மனச்சாட்சியை உருத்திக் கொண்டிருப்பதை நாம் பார்க்கின்றோம். அந்த வேதனையை உணர்வதற்கு நீங்கள் பலஸ்தீனர்களாக அல்லது முஸ்லிமாக இருக்க வேண்டியதில்லை. நீங்கள் ஒரு மனிதனாக இருந்தால் போதும். 

மிகவும் ஆபத்தானது என்னவென்றால், அழிவு மட்டுமன்றி, பேச வேண்டியவர்கள் பேசாமல் இருப்பதாகும். உலகம் கருணையை இழந்து வருகின்றது. ஒரு சிறிய நாடு என்ற வகையில் இலங்கை எப்போதும் நீதியின் பக்கம் நிலைத்து நிற்கின்றது. நாம் தனியாக இருந்தாலும் எனது குரல் சிறியதாக இருந்தாலும் நாம் கொள்கை உடையவர்களாக இருக்க வேண்டும். 

கூடியுள்ள இளைஞர்கள் தூரம் என்பதற்காகவோ அல்லது அச்சத்திற்காகவோ அமைதி காக்கக் கூடாது. நான் பாராளுமன்ற சபாநாயகராகப் பணிபுரியும் போது, பெருமளவு அரசியல் அழுத்தங்கள், அச்சுறுத்தல்களை மற்றும் காட்டிக்கொடுப்புகளை எதிர்கொண்டேன்.

ஆனால், அரசியல் யாப்பினை உறுதியாகக் கடைப்பிடித்தேன். வசதிக்காக அன்றி கட்சிக்கப்பால் நாட்டையே நான் தெரிவு செய்தேன். நான் பொது வாழ்வில் இருந்து விடை பெற்ற பின் எமது ஜனநாயகத்தில் மிகவும் குழப்பமான நேரத்தில்தான் தலைமை தாங்கினேன். தலைமை தாங்குவேன் என நினைத்துப் பார்க்கவும் இல்லை. 

நீங்களும் இவ்வாறான சந்தர்ப்பங்களை வாழ்வில் எதிர்கொள்வீர்கள். உங்கள் வாழ்வில் உங்கள் செயற்பாடுகளை நீங்கள் வசதி அல்லது மனசாட்சியைத் தெரிவு செய்யக்கிடைத்தால் மனச்சாட்சியைத் தெரிவு செய்யுங்கள். 

நான் இளைஞராக இருக்கும்போது 1965 ஆம் ஆண்டு நாட்டில் குழப்பநிலை உருவானபோது இராணுவத்தில் இணைந்தேன். அதிலிருந்து 40 ஆண்டுகள் பொது வாழ்வில் பணிபுரிந்தேன். நேர்மையாகச் செயற்படுவது போன்று உயர்வானது ஒன்றுமே இல்லை. இளம் தலைவர்கள் எழுச்சியைக் காண்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கின்றது. 

நெருக்கடியான இக்காலத்தில் ஐக்கியமாக இருப்பதே பலமாகும். ஒரு வெறுப்பினை வெறுப்பாலன்றி அன்பாலே வெல்ல முடியும். உயிரை யார் பாதுகாத்தாலும் அது மனிதத்துவத்தை பாதுகாப்பது என்பதாகும் என இஸ்லாம் கூறுகின்றது. யாரொருவர் ஒருவருடைய உயிரைப் பாதுகாக்கின்றாரோ அவர் சக மனிதத்துவத்தைப் பாதுகாக்கின்றது என அல்குர்ஆன் கூறுகின்றது.

இது சமயப் போதனை மட்டுமல்ல, மனிதப் பெறுமானத்தை உணர்த்துகின்றது. நாம் நாட்டை ஒன்றாகக் கட்டியெழுப்புவதற்காகவே அடிப்படையான நான் இதனைப் படித்துள்ளேன். 

எமது அரசியல் வேறுபாடுகளை விட நமது பொது மனிதத்துவம் கூடுதலான புனிதத்துவம் மிக்கது. இலங்கையர்களான எமக்கு துன்புறுத்தல் எது என்பதும் இலகுபடுத்தல் எது என்பதுவும் தெரிந்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் பாராளுமன்றத்தில் இருந்து கொண்டு அரசியல்வாதியாக அன்றி ஒரு தந்தையாகவே எனது அநேக செயற்பாடுகளை நான் முன்னெடுத்தேன். முஸ்லிம் தலைவர்கள் காட்டிய மேலதிக இணக்கப்பாடு இன்னும் எனது ஞாபகத்தில் இருக்கின்றது என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment