ஈரானில் தாக்குதல்கள் நடைபெற்றுவரும் நிலையில் கட்டாரிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் தங்கள் குடிமக்களுக்கு அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்து வருவதால் அங்கும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
கட்டாரின் தோஹாவின் தென்மேற்கே உள்ள இரண்டு இராணுவ தளங்களில் அல் உதெய்த் விமான தளத்தில் அமெரிக்கப் படையினர் 10,000 பேர் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த படைகளையும் அமெரிக்கா திரும்பப்பெற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் கட்டாரில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த டசின் கணக்கான போர் விமானங்கள் தற்போது அங்கிருந்து மாற்றப்பட்டுள்ளதாக செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
இந்த நிலையில் கட்டார் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மஜித் அல் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கட்டாரில் உள்ள வெளிநாட்டினருக்கு அந்நாட்டு தூதரகங்கள் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன. கட்டாரில் பாதுகாப்பான இடங்கள் குறித்தும், பயணங்களை புறக்கணிப்பது குறித்தும் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன. இவை பொதுவான அரசியல் நிர்வாகம் சார்ந்தவை மட்டுமே அன்றி, குறிப்பிடத்தகுந்த அச்சுறுத்தலை பிரதிபலிக்கவில்லை.
கட்டாரின் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், துறை சார்ந்த வல்லுநர்கள், அதிகாரிகள் தொடர்ந்து எல்லைப் பகுதிகளை கண்காணித்து வருகின்றனர். இதனால், பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே மறு அறிவிப்பு வரும் வரை கட்டாரில் உள்ள அமெரிக்க குடிமக்கள் தங்கள் இடங்களிலேயே தங்குமாறு அமெரிக்க தூதரகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மிகுந்த எச்சரிக்கையின் காரணமாக இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. ஆனால் தூதரகம் மேலதிக தகவல்களை வழங்கவில்லை.
No comments:
Post a Comment