தெரிவு செய்யப்பட்ட பிரதான குளங்களுக்குரிய எல்லைகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட ஒதுக்கப் பிரதேசங்களைப் பாதுகாக்கின்ற வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று (16) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு 19 தீர்மானங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நகரமயமாக்கல், குடியேற்றங்களின் விரிவாக்கம் மற்றும் புதிய கைத்தொழில் பேட்டைகள் நிறுவப்படுகின்றமை போன்ற காரணங்களால் குளங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள காணிகளில் இடம்பெறுகின்ற பல்வேறு நிலப்பயன்பாட்டுப் போக்குகள் அதிகரித்து வருகின்றமையைக் காணக்கூடியதாக உள்ளது.
நிலப்பயன்பாட்டுப் போக்குகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் தற்போது பல்வேறு தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ளதும், அவ்வாறான தாக்கங்களுக்கு உள்ளாகின்ற சாத்தியங்களை அடையாளங் காணக்கூடியதாக உள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்ற குளங்களின் எல்லைகளை எந்தவொரு பிரஜைக்கும் அல்லது தரப்பினருக்கும் இலகுவில் அடையாளம் காண்பதற்கு இயலுமாகும் வகையில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் எல்லைக் கற்களை இட்டு திட்டவட்டமாக நிலத்தை குறியீடு செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், எல்லைகளுக்கிடையே பொருத்தமான மரங்களை நடுகை செய்து உயிர் வேலியை அமைப்பது பொருத்தமானதெனவும் கண்டறியப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்காக நில அளவைத் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம், ஏற்புடைய பிரதேச செயலாளர்கள், கமக்கார அமைப்புக்கள், சுற்றாடல் அமைப்புக்கள், சமூக மட்ட நிறுவனங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை பொருத்தமான வகையில் பங்கேற்புச் செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கமைய விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள 100 மில்லியன் ரூபாய்களைப் பயன்படுத்தி உத்தேச வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment