நிறுவனங்களின் பாதுகாப்பில் அல்லது பொறுப்பிலுள்ள பிள்ளைகள் மற்றும் வீதியோரச் சிறுவர்களுக்கு வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று (16) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு 19 தீர்மானங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பெற்றோரை இழந்த, பாதுகாவலரை இழந்த, தாய் மற்றும் தந்தை இருவரும் அல்லது அவர்களில் ஒருவரையேனும் இழந்த அல்லது பாதுகாவலரின் பொறுப்பில் இருப்பினும், வாழ்கின்ற வீட்டில் தகுந்த பாதுகாப்பில்லாத பிள்ளைகளுக்கு அநாதைப் பிள்ளைகள் மற்றும் கைவிடப்பட்ட பிள்ளைகளுக்கு பராமரிப்பு இல்லங்கள்/சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் நிறுவனப் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது.
2024 ஆம் ஆண்டிறுதியில் அரச, தொண்டர் அமைப்புக்கள்மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் 356 நிலையங்களில் 9,191 பிள்ளைகள் வதிவிடப் பாதுகாப்புப் பெற்று வருவதாகப் பதிவாகியுள்ளது.
நிறுவனப் பாதுகாப்பு மற்றும் பொறுப்பிலுள்ள சிறுவர்கள் மற்றும் வீதியோரச் சிறுவர்களுக்கு மாதாந்தம் ரூ. 5,000 கொடுப்பனவு வழங்குவதற்காக 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ரூ. 1,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, உத்தேச வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு கீழ்க்காணும் வகையில் செலுத்துவதற்கும், குறித்த வேலைத்திட்டத்தை பேண்தகு வகையிலும் பயனுள்ளதாகவும் மேற்கொண்டு செல்வதற்குத் தேவையான வழிகாட்டல் மற்றும் பின்னூட்டல் நடவடிக்கைகளுக்க மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளரின் தலைமையிலும் மற்றும் ஏனைய ஏற்புடைய நிறுவனங்களின் அதிகாரிகளுடன் கூடிய தேசிய வழிநடாத்தல் குழுவொன்றை நியமிப்பதற்கும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
1. ரூ. 5,000 வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவில் ரூ. 3,000 பாதுகாப்பின் கீழ் வழங்கப்பட வேண்டிய கல்வி, சுகாதாரம் மற்றும் ஏனைய நலனோம்புகைச் செலவுகளுக்காக பிள்ளை பராமரிக்கப்பட்டு வரும் அபிவிருத்தி நிலையத்திற்கு அல்லது பாதுகாவலருக்கு தேசிய சேமிப்பு வங்கி மூலம் வழங்குதல்.
2. எஞ்சிய ரூ. 2,000 பிள்ளையின் எதிர்கால அபிவிருத்திக்காக தேசிய சேமிப்பு வங்கியில் பிள்ளையின் பெயரில் சேமிப்பு வங்கிக் கணக்கில் மாதாந்தம் வைப்பிலிடல்.
No comments:
Post a Comment