(எம்.மனோசித்ரா)
கொழும்பில் ஆட்சியமைப்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கிறது. அந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியென்றால் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் மேயராக தெரிவு செய்யப்படுவார். எனினும் இறுதிவரை எதையும் ஸ்திரமாகக் கூற முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், சில உள்ளுராட்சி மன்ற ஆணையாளர்கள் சட்டத்தை மீறி அரசாங்கத்தின் தேவைக்காக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறான ஆணையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.
தமக்கு ஆட்சியமைப்போம் என்ற நம்பிக்கை இருந்தால் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம்.
கொழும்பில் ஆட்சியமைப்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கிறது. அந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியென்றால் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் மேயராக தெரிவு செய்யப்படுவார்.
கொழும்பில் எமக்கு 29 ஆசனங்களும், ஐக்கிய தேசிய கட்சிக்கு 13 ஆசனங்களும், பொதுஜன பெரமுனவுக்கு 5 ஆசனங்களும், முஸ்லிம் காங்கிரசுக்கு 4 ஆசனங்களுமே உள்ளன.இவை அனைத்தையும் ஒன்று சேர்த்தாலும் வாக்குகள் போதாது.
கொழும்பில் வெற்றி பெற 59 வாக்குகள் தேவையாகும். கதிரைக்கு ஒரு ஆசனமும், பல்வேறு சுயேட்சைக் குழுக்களும் உள்ளன. 59 வாக்குகளைப் பெற வேண்டுமெனில் அவர்களது ஆதரவையும் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் நாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்த தரப்பினர் ஸ்திரமான நிலைப்பாட்டில் இல்லை. எனவே இறுதி நேரம் வரை எதையும் ஸ்திரமாகக் கூற முடியாது.
ஒவ்வொரு உறுப்பினர்களதும் பெயரைக் குறிப்பிட்டு இரகசிய வாக்கெடுப்பா, பகிரங்க வாக்கெடுப்பா என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். அதனை விடுத்து ஆணையாளர்கள் விருப்பத்துக்கு வாக்கெடுப்பு குறித்து தீர்மானிக்க முடியாது.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் வெற்றி பெற வேண்டுமெனில் இன்னும் 30 உறுப்பினர்களின் ஆதரவு தேவையாகவுள்ளது. ஏனைய கட்சிகளின் ஆதரவைப் பெற்றாலும் சுயாதீன குழுக்களில் 7 உறுப்பினர்களின் ஆதரவு அத்தியாவசியமானதாகும் என்றார்.
No comments:
Post a Comment