அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலக ஈரான் திட்டம் : தாக்குதல்கள் உக்கிரம் : உயிரிழப்பு உச்சம் - News View

About Us

About Us

Breaking

Monday, June 16, 2025

அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலக ஈரான் திட்டம் : தாக்குதல்கள் உக்கிரம் : உயிரிழப்பு உச்சம்

இஸ்ரேல் மற்றும் ஈரான் நான்காவது நாளாக நேற்றும் பரஸ்பரம் உக்கிர தாக்குதல்களை நடத்திய நிலையில் இரு நீண்ட கால எதிரி நாடுகள் இடையிலான வான் போர் எந்தத் தணிவும் இல்லாமல் நீடித்து வருகிறது.

இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் துறைமுக நகரான ஹைபா மீது நேற்று அதிகாலை ஈரான் நடத்திய சரமாரி ஏவுகணை தாக்குதல்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டிருப்பதோடு எட்டுப் பேர் கொல்லப்பட்டனர். இதற்கு டெஹ்ரான் மக்கள் விரைவில் விலை கொடுப்பார்கள் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ராயேல் காட்ஸ் எச்சரித்துள்ளார்.

ஈரான் அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கான சட்டமூலத்தை பாராளுன்றம் தயாரித்து வருவதாக அந்த நாடு தெரிவித்துள்ளது. எனினும் பேரழிவு ஆயுதங்களை தயாரிப்பதற்கு ஈரான் எதிராக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்கு பல வாரங்கள் எடுத்துக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் கணிசமான அணு அயுதங்களை வைத்திருப்பதாக நம்பப்படுகின்றபோதும் இஸ்ரேல் அதனை இதுவரை ஏற்கவோ அல்லது மறுக்கவோ இல்லை. அதேபோன்று மத்திய கிழக்கில் இஸ்ரேல் மத்திரமே அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானின் அணு சக்தி பலத்தை ஒழிப்பதாகக் கூறியே இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஏற்கனவே ஈரானின் இராணுவ தளபதிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்ட நிலையில் நேற்று நடத்திய தாக்குதல்களில் ஈரானின் புரட்சிக் காவல் படை உளவுப் பிரிவு தலைவர் உட்பட நான்கு மூத்த உளவு அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலின் தாக்குதல்களில் ஈரானில் இதுவரை 224 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு இதில் 70 பெண்கள் மற்றும் சிறுவர்கள் இருப்பதாக ஈரான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

1979 இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் ஈரான் மிக மோசமாக பாதுகாப்பு ஊடுருவலை எதிர்கொண்டிருப்பதோடு மோதல் ஆரம்பித்தது தொடக்கம் இஸ்ரேலுடன் தொடர்புபட்ட உளவாளிகள் பலரை கைது செய்திருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கு எதிரான பதில் தாக்குதலாக சுமார் 100 ஏவுகணைகளை வீசியதாக ஈரான் நேற்று குறிப்பிட்டது. இதில் எட்டுப் பேர் கொல்லப்பட்டதாகவும் இதில் இஸ்ரேலின் மத்திய பகுதியில் ஐவரும் ஹைபாவில் மூவரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவ வானொலி குறிப்பிட்டுள்ளது.

இதன்படி கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் ஈரான் நடத்திய தாக்குதல்களில் இஸ்ரேலில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 ஐ தாண்டியுள்ளது. 300 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். டெல் அவிவில் உள்ள அமெரிக்க தூதரக கிளை ஒன்றும் தாக்குதலால் சிறிய சேதத்திற்கு உள்ளாகி இருப்பதாக இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதுவர் மைக் ஹக்கபீ தெரிவித்துள்ளார்.

டெல் அவிவில் பல குடியிருப்பு பகுதிகளும் சேதம் அடைந்திருப்பதோடு ஹைபாவில் 30 பேர் வரை காயமடைந்த நிலையில் அங்கு தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேல் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

புதிய வடிவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களால் இஸ்ரேலின் பல அடுக்கு பாதுகாப்பு அமைப்பை இலக்கு வைக்க முடிந்ததாகவும் பல இலக்குகளை வெற்றிகரமாக தாக்க முடிந்ததாகவும் ஈரான் புரட்சிக்காவல் படை குறிப்பிட்டது.

இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் வெளியிட்ட அறிவிப்பில், ‘டெஹ்ரான் குடியிருப்பாளர்கள் விரைவில் விலை கொடுப்பார்கள்’ என்று எச்சரித்தார். எனினும் அவர் பின்னர் வெளியிட்ட அறிவிப்பில், டெஹ்ரான் குடியிருப்பாளர்களை திட்டமிட்டு காயப்படுத்தும் எண்ணமில்லை என்றார்.

முன்னதாக இஸ்ரேலிய போர் விமானங்கள் டெஹ்ரானில் உள்ள குத்ஸ் படையின் பல கட்டளை மையங்களையும் தாக்கியது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படையின் ஈரானுக்கு வெளியில் இராணுவம் மற்றும் உளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பிரிவாக இந்த குத்ஸ் படை உள்ளது.

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகள் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் கூறியது. இதுவரை கொல்லப்பட்டவர்களில் 90 வீதத்துக்கும் அதிகமானவர்கள் பொதுமக்கள் என்று ஈரான் சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

ஜி7 தலைவர்கள் கனடாவில் ஒன்றுகூடிய நிலையில் இஸ்ரேல்–ஈரான் மோதல் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டுக்குப் புறப்படுவதற்கு முன்னர், மோதலை நிறுத்துவதற்கான திட்டம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘ஒப்பந்தம் ஒன்று எட்டப்படும் என்று நான் எதிர்பார்க்கிறேன். ஒப்பந்தம் ஒன்றுக்கான நேரம் வந்துவிட்டதாக நான் நினைக்கிறேன்’ என்றார்.

எனினும் எதிர்வரும் நாட்களில் இராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்துவதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேலின் தாக்குதலை வரவேற்றிருக்கும் அமெரிக்கா இதில் பங்கு வகிப்பதாக ஈரான் சுமத்தும் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது. 

அதேபோன்று அமெரிக்க இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து அவர் ஈரானை கடுமையாக எச்சரித்துள்ளார். 

இஸ்ரேலின் தாக்குதலுக்கு மத்தியில் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதை ஈரான் நிராகரித்துள்ளது. இது தொடர்பில் கட்டார் மற்றும் ஓமான் மத்தியஸ்தர்களுக்கு பதில் அளித்ததாக ஈரான் அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment