முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத் திருத்தம் தொடர்பில் நாளை வெள்ளிக்கிழமை விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொள்வதற்கான அழைப்பு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக்கு இந்த சட்டத் திருத்தம் தொடர்பில் சில முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் நோக்கிலேயே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக்கலந்துரையாடல் நாளை (27) வெள்ளிக்கிழமை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கத்தில் இடம்பெறவுள்ளது. இந்த சட்டத் திருத்த விடயத்தில் தொடர்புடைய பல முஸ்லிம் அமைப்புக்களை குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.
முன்னாள் நீதி அமைச்சர்கள் பலரினால் இந்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக பல குழுக்கள் நியமிக்கப்பட்டு சிபாரிசுகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
எனினும், மிகப் பழமை வாய்ந்த முஸ்லிம் விவாக மற்றும் விவகாரத்து சட்டத்தில் இதுவரை எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம் விவாக மற்றும் விவகாரத்து சட்டம் இல்லாமலாக்கப்படும் என்ற போலிப்பிரச்சாரமொன்று கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது பரப்பப்பட்டது.
இதேவேளை, முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைத்து வருகின்ற பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜினை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சந்தித்து பேச்சு நடத்தியது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஆலோசனையின்றி முஸ்லிம் விவாக மற்றும் விவகாரத்து சட்டத்தில் எந்தத் திருத்தமும் முன்னெடுக்கப்படாது என்ற அமைச்சர் சரோஜா போல்ராஜினால் உறுதிமொழி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Vidivelli
No comments:
Post a Comment