நீண்ட காலமாக நடத்தப்படாமல் பிற்போடப்பட்டுவரும் மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்துவதற்கான அழுத்தத்தை இலங்கை அரசாங்கத்திற்கு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் கொடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் வலியுறுத்தினார்.
அமைச்சர் பிமல் ரத்னாயக்க தலைமையில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை உயர்ஸ்தானிகர் வோல்கர் துர்க் (Volker Türk) நேற்றுமுன்தினம் பாராளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே மு.கா. செயலாளர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் நிலையான நல்லிணக்கத்திற்கு அடிப்படையாக மக்களாட்சி வலுவூட்டல் மற்றும் அதிகாரப் பகிர்வின் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
அத்துடன், வடக்கு, கிழக்கு மற்றும் மலைநாடு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது மாகாண பிரதிநிதிகள் ஊடாக அரசியல் அதிகாரம் செலுத்தும் உரிமையை பெற வேண்டும். எனவே, நீண்ட காலமாக நடைபெறாமல் உள்ள மாகாண சபை தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும். இதற்கான அழுத்தத்தை ஐ.நா. இலங்கை அரசாங்கத்திற்கு கொடுக்க வேண்டும்.
ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகர் துர்க் கருத்து வெளியிடுகையில், மனித உரிமை சவால்களை எதிர்கொள்வதற்கான ஒரு பரந்த பார்வை தேவை.
குறிப்பாக, கடந்த காலத்தில் இடம்பெற்ற இனவாதம், வன்முறைகள் மற்றும் உள்நாட்டுப் போர் காரணமாக பாதிக்கப்பட்ட சமுதாயங்களின், குறிப்பாக தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக மக்கள் வாழும் பகுதிகளில், சமூக மற்றும் பொருளாதார மேம்பாடுகள் முன்னேற வேண்டியது அவசியமாகும்
மனித உரிமைகள் தொடர்பான அணுகுமுறைகள் சமூகவியல் நுட்பத்துடனும், அளவீட்டு நேர்மையும், சமூக நீதி மற்றும் பூரணப் பங்கேற்பும் அடிப்படையிலானதாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இதனிடையே இந்த சந்திப்பு, இலங்கையின் தற்போதைய அரசியல் நிலை, மனித உரிமை தொடர்பான சவால்கள், போருக்குப் பிறகு சமூகங்களின் மீட்பு மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றின் மீதான ஐ.நா பார்வையை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான நிகழ்வாக அமைந்திருந்ததாக ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
Vidivelli
No comments:
Post a Comment