நியூயோர்க் நகர மேயர் பதவிக்கான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைக் கொண்ட உகண்டாவில் பிறந்த 33 வயதேயான ஸோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றுள்ளார்.
இதற்கமைய நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றால், முதன்முறையாக முஸ்லிம் ஒருவர் நியூயோர்க் நகர மேயராகப் பதவி வகிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பைப் பெறுவார்.
சுமார் ஒரு மில்லியன் முஸ்லிம்களைக் கொண்ட நியூயோர்க் நகரில், 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மேயர் தேர்தலில் வாக்களித்தவர்களில் 12 சதவீதம் பேர் முஸ்லிம்களாவர்.
மம்தானி தனது தேர்தல் பிரசாரத்தின் ஆரம்பம் முதலே தனது மத அடையாளத்தை முன்னிறுத்தினார். ரமழான் மாதத்தில் நோன்பு நோற்றுக் கொண்டே பிரசாரம் மேற்கொண்ட அவர், நகரெங்கும் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் சமூக மையங்களுக்குச் சென்று, அங்குள்ள மக்களிடம் பிரசாரங்களை முன்னெடுத்தார்.
இத் தேர்தலில் 67 வயதான முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோவை அவர் தோற்கடித்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் கியூமோ முன்னணியில் இருந்தபோதும், இளைஞர்கள், கறுப்பின மக்கள், முதன்முறை வாக்காளர்கள் மற்றும் அவ்வப்போது வாக்களிப்பவர்கள் எனப் பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு பரந்த கூட்டணியை மம்தானி உருவாக்கியதன் மூலம் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. இந்த வாக்கு வங்கியை அதிகரிப்பதில் முஸ்லிம் வாக்காளர்கள் கணிசமான பங்காற்றினர்.
நியூயோர்க்கின் சமூக செயற்பாட்டளரான வஜாஹத் அலி சமூக ஊடகத்தில் கருத்து தெரிவிக்கையில், “ஒரு முஸ்லிம் குடியேறியவரின் மகன் நியூயோர்க் நகரத்தின் மேயராக ஆகக்கூடும். இதற்குக் காரணம் அவர் ஒரு யூத வேட்பாளரையும் கறுப்பின வேட்பாளரையும் ஆதரித்தது மட்டுமல்ல, அவர்களும் இவரை ஆதரித்ததே. இது நம் அனைவருக்கும் ஒரு அழகான முன்னுதாரணம்” என்று குறிப்பிட்டார்.
காஸாவில் உள்ள பலஸ்தீனியர்களுக்கான தனது வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்த மம்தானி, இஸ்ரேல் மீதான விமர்சனங்களை பகிரங்கமான முன்வைத்து வந்தார்.
பிரச்சாரத்தின் இறுதி நாட்களில், தானும் தனது குடும்பத்தினரும் கொலை மிரட்டல்களைச் சந்தித்தாக மம்தானி கண்ணீருடன் விவரித்தார். ஒருவரின் மதத்தின் அடிப்படையில் இத்தகைய அச்சுறுத்தல்கள் ஏற்படுத்துகின்ற அச்சத்தையும் கவலையையும் அவர் விளக்கினார்.
அமெரிக்காவின் முக்கிய முஸ்லிம் தலைவர்களும் மம்தானியின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க-இஸ்லாமிய உறவுகளுக்கான கவுன்சிலின் தேசிய நிர்வாக இயக்குனர் நிஹாத் அவாத், மம்தானியின் வெற்றி “பலஸ்தீனத்திற்கும் நீதிக்கும் கிடைத்த வெற்றி” என்று குறிப்பிட்டார். மேலும், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்த வெற்றி நியூயோர்க் அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளதுடன், பல்வேறு சமூகப் பின்னணிகளைக் கொண்ட வாக்காளர்களின் அரசியல் செல்வாக்கையும் பிரதிபலிக்கிறது.
மம்தானியின் பயணம், சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவத்திற்கும் அரசியல் பங்கேற்பிற்கும் ஒரு வலுவான செய்தியை கூறுவதாக அமைந்துள்ளது.
No comments:
Post a Comment