உதவி பெற வந்தோர் மீது இஸ்ரேல் மீண்டும் துப்பாக்கிச் சூடு : பலஸ்தீனர்கள் 17 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 10, 2025

உதவி பெற வந்தோர் மீது இஸ்ரேல் மீண்டும் துப்பாக்கிச் சூடு : பலஸ்தீனர்கள் 17 பேர் பலி

மத்திய காசாவில் அமெரிக்க ஆதரவு காசா மனிதாபிமான நிறுவனத்தின் உதவி விநியோக தளம் ஒன்றை அணுகிய ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் மீது இஸ்ரேலிய படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நேற்று (10) மேலும் 17 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு பலரும் காயமடைந்துள்ளனர்.

காசா எங்கும் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் தொடரும் நிலையில் இந்த உதவி விநியோகத் தளங்களில் இடம்பெறும் தொடர்ச்சியான தாக்குதல்களிலும் பலஸ்தீனர்கள் பலரும் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இந்த புதிய தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் மத்திய காசாவின் நுஸைரத் அகதி முகாமில் உள்ள அல் அவ்தா வைத்தியசாலை மற்றும் வடக்கின் காசா நகரில் உள்ள அல் குத்ஸ் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாக இஸ்ரேல் இராணுவம் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளது. ஐ.நா. மற்றும் பிரதான தொண்டு நிறுவனங்களுக்கு மாற்றாக இஸ்ரேலின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் இந்த உதவி விநியோகத் தளங்களுக்குச் செல்லும் பாதைகள் போர் வலயங்களாக கருதப்படுவதாக இஸ்ரேல் இராணுவம் கடந்த வாரம் குறிப்பிட்டது.

உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி தொடக்கம் காலை 6 மணிக்கு இடையே இந்த பாதையை பயன்படுத்த வேண்டாம் என்று அது எச்சரித்திருந்தது.

காசா மனிதாபிமான நிறுவனத்தின் உதவி விநியோகம் கடந்த மே கடைசியில் ஆரம்பிக்கப்பட்டபோது, இந்த விநியோகம் பக்கச்சார்பற்ற முறையில் முன்னெடுக்கப்படுவதாக அமெரிக்கா கூறியது. எவ்வாறாயினும் இந்த உதவித் தளங்களை அடைவதற்கு பல மணி நேரம் பயணிக்க வேண்டி இருப்பதாகவும் இதனால் பயணத்தை சூரியோதயத்திற்கு முன்னரே ஆரம்பிக்க வேண்டி இருப்பதாகவும் பலரும் தெரிவித்துள்ளனர்.

தமது உதவி விநியோகத் தளங்களில் எந்த சம்பவமும் இடம்பெறவில்லை என்று காசா மனிதாபிமான நிறுவனம் கூறியபோதும், அந்த இடத்தை அடையும் பாதை குழப்பகரமானது மற்றும் வன்முறை மிக்கது என்று பலஸ்தீனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

‘உணவைப் பெறும் எதிர்பார்ப்புடன் அதிகாலை 2 மணிக்கே நான் சென்றேன். அப்போது ஆட்கள் வெறுங்கையுடன் திரும்பி வருவதைக் கண்டேன். உதவிப் பொதிகள் ஐந்து நிமிடத்திலேயே தீர்ந்துவிட்டதாகவும் இது பைத்தியக்காரத்தனமானது மற்றும் போதுமானதாக இல்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்’ என்று இரு குழந்தைகளின் தந்தையான 40 வயது மொஹமட் அபூ ஆமிர் குறிப்பிட்டுள்ளார்.

‘பல்லாயிரம் பேர் மத்திய பகுதியில் இருந்தும் சிலர் 20 கி.மீ. இற்கு மேல் நடந்து வடக்கு பகுதியில் இருந்தும் கூட வந்திருந்தார்கள். அவர்கள் ஏமாற்றத்துடன் மாத்திரமே வீடு திரும்புகிறார்கள்’ என்று அவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு மேலும் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சத்தங்களை கேட்டதாகவும் என்ன நடந்தது என்பதை பார்க்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காசாவின் 2.3 மில்லியன் மக்கள் தொகைக்கான ஒட்டுமொத்த உதவி விநியோகத்தையும் 11 வாரங்கள் முடக்கிய நிலையில் கடந்த மே 19 ஆம் திகதி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உதவிகள் செல்ல ஐ.நா. தலைமையிலான உதவி விநியோகங்களுக்கு அனுமதி அளித்தது. எனினும் காசாவுக்கு விநியோகிக்கப்படும் உதவி கடலில் விழும் நீர் துளி அளவுக்கு உள்ளது என்று ஐ.நா. குறிப்பிட்டதோடு பஞ்ச நிலை ஒன்று அதிகரிப்பதாகவும் அது எச்சரித்தது.

ஐ.நா களஞ்சியங்களுக்கு எடுத்துச் சென்ற மாவு ஏற்றிய குறைந்தது 40 லொறிகள் காசா நகரில் உள்ள கடற்கரை வீதியை ஒட்டிய நபுல்சி சுற்றுவட்டப்பாதை அருகே பட்டியில் உள்ள பலஸ்தீனர்கள் மற்றும் திருடர்களால் சூறையாடப்பட்டதாக பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் டெயிர் அல் பலாஹ்வில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று இடம்பெற்ற இஸ்ரேலின் வான் தாக்குதலில் குறைந்தது எட்டு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அல் அக்ஸா தியாகிகள் வைத்தியசாலையின் மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டில் அல் ஜசீரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்திருப்பதாகவும் அது கூறுகிறது.

தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் உள்ள அல் மவாசி பகுதியில் இடம்பெயர்ந்தவர்கள் அடைக்கலம் பெற்றுள்ள கூடாரம் ஒன்றின் மீது இஸ்ரேலியப் படை நடத்திய செல் குண்டுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தின் மூவர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.

கடந்த 20 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் காசா மீது நடத்தி வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 55 ஆயிரத்தை நெருங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை காசாவுக்கு உதவிகளை ஏற்றி பயணித்த படகை இஸ்ரேல் இராணுவம் சர்வதேச கடற்பகுதியில் இடைமறித்து அதில் இருந்த 12 செயற்பாட்டாளர்களையும் கைது செய்த நிலையில் அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் சுவீடன் நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டா துன்பர்க் நேற்று நாடுகடத்தப்பட்டார்.

துன்பர்க் டெல் அவிவில் இருந்து நேற்றுக் காலை பிரான்ஸ் செல்லும் விமானத்தில் நாடு கடத்தப்பட்டதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது. எனினும் நாடுகடத்தப்படுவதற்கு எதிர்ப்பை வெளியிட்ட ஆறு பிரான்ஸ் செயற்பாட்டாளர்கள் இஸ்ரேலிய சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டிருப்பதாக பிரான்ஸ் குறிப்பிட்டுள்ளது.

மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் காசாவுக்கு சிறிய அளவு உதவிகளை எடுத்துச் சென்றபோது அவர்களின் படகு இடைமறிக்கப்பட்டது.

காசா போரினால் பிராந்தியம் எங்கும் பதற்றம் நீடிக்கும் சூழுலில் யெமனின் செங்கல் துறைமுகமான ஹுதைதா மீது நேற்று இஸ்ரேலிய கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. யெமன் ஹுத்தி கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக கடற்படை கூறியது.

ஹுதைதா துறைமுகத்தின் கப்பல்துறைகள் மீது இரு தாக்குதல்கள் இடம்பெற்றதாக ஹூத்திக்களினால் நடத்தப்படும் அல் மசிரா தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது.

காசாவில் பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக, யெமனின் பெரும் பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹூத்திக்கள் இஸ்ரேல் மீது அடிக்கடி ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தும் நிலையிலேயே இஸ்ரேல் அந்த கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்துகிறது.

No comments:

Post a Comment