(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
என்னை அடக்குவதற்கே அரசாங்கம் போட்டி போட்டுக்கொண்டு எனக்கு எதிராக வழக்கு தொடுத்திருந்தது. வழக்கு தொடுப்பது பரவாயில்லை. ஆனால் அசிங்கப்படாமல் அதனை செய்துகொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஷாமரசம்பத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற உற்பத்தி தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இரண்டு மாதங்கள் சிறையில் இருந்தேன். இரண்டு நீதிமன்றங்களில் போட்டிக்கு எனக்கு எதிராக வழக்கு தொடுத்தார்கள். கொழும்பில் 3 வழக்குகள் பதுளையில் ஒரு வழக்கு. கொழும்பு நீதிமன்றில் பிணை வழங்கும்போது பதுளை நீதிமன்றில் அது மறுக்கப்படுகிறது. பதுளை வழக்கில் நேற்றுமுன்தினம் பிணை வழங்கும் என தெரிந்துகொண்டு, கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் பிணை வழங்குவதை நிராகரிக்குமாறு தெரிவித்து மேலுமொரு குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
வழக்கு தொடுத்ததற்கு பரவாயில்லை. ஆனால் அசிங்கப்படாமல் அதனை செய்துகொள்ள வேண்டும். எனக்கு பிணை வழங்க மறுப்பு தெரிவித்து முன்வைத்த விடயம்தான், எனது மனைவி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, எனக்கு பிணை வழங்குவது தொடர்பில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்துமாறு தெரிவித்துள்ளாராம்.
கேஸ் சிலிண்டரின் தலைவர் என்ற வகையில் எனது மனைவியை ரணில் விக்ரமசிங்க அழைத்திருந்தார். அதனால் எனது மனைவி அவரை சந்தித்திருக்கிறார். ரணில் விக்ரமசிங்க அவரது மனைவி தெரிவிப்பதை கூட செயற்படுத்த மறுக்கும் நிலையில் எனது மனைவி சாெல்வதை செய்வாரா? ரணில் விக்ரமசிங்க என்பவர் உலகத்தை விழுங்கி, தண்ணீர் குடிக்காமல் இருக்கும் ஒருவர்.
அதனால் ரணில் விக்ரமசிங்க எனது மனைவி தெரிவிப்பதை செய்யும் நபர் அல்ல. ரணில் விக்ரமசிங்க செய்தியாளர் சந்திப்பு நடத்தியதால் மக்கள் தூண்டப்படுவதாக தெரிவித்து, எனக்கு பிணை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது நகைச்சுவையாகும். என்றாலும் இரண்டு மாதங்களுக்கு பின்னர் எனக்கு பதுளை நீதிமன்றம் பிணை வழங்கி இருக்கிறது.
மாகாண சபையின் நிலுவை பணத்தை மீள பெற்றதாகவே எனக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண சபை கூட்டு நிதியத்தில் வைப்பு செய்யப்படும் பணம், மீள பெறப்பட்டால் அதனை அந்த வருடத்துக்குள் செலவழிக்க வேண்டும் என்பதாகும்.
அப்படியானால் வழக்கு தொடுத்திருக்க வேண்டி இருப்பது கூட்டு நிதியத்தில் பணத்தை வைப்பு செய்து நிறுத்தி வைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு எதிராகவாகும். அதனால் வழக்கொன்று தொடுக்கும்போது அது தொடர்பில் நன்கு தெரிந்துகாெண்டு வழக்கு தொடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் சும்மா அசிங்கப்படக்கூடாது.
அத்துடன் வெள்ளையர் காலத்தில் இருந்து எமது நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு இருக்கவில்லை. இந்த அரசாங்கத்திலே நாட்டில் உப்பு இல்லாத பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது அரசாங்கத்தின் இயலாமையாகும். அரசாங்கம் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். எமது இயலாமமையாலே 2022 இல் நாட்டில் போராட்டம் ஒன்று ஏற்பட்டது. அதனாலே இந்த அரசாங்கத்துக்கு மக்கள் வாக்களி்த்தார்கள் என்றார்.
No comments:
Post a Comment