(நா.தனுஜா)
நியூஸிலாந்தின் பிரதி பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான வின்ஸ்டன் பீற்றர்ஸ் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் சனிக்கிழமை (24) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் 24 ஆம் திகதி நாட்டுக்கு வருகை தரவிருக்கும் அவர், 28 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்.
இதன்போது மரியாதை நிமித்தமாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோரைச் சந்திக்கவுள்ள அவர், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்தை சந்தித்து பரந்துபட்ட இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளார்.
இப்பேச்சுவார்த்தையின்போது குறிப்பாக வர்த்தகம், முதலீடு, விவசாயம், கல்வி, விளையாட்டு மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை மேலும் விரிவுபடுத்துவது குறித்து விசேட அவதானம் செலுத்தப்படவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதுமாத்திரமன்றி இவ்விஜயத்தின்போது நியூஸிலாந்து வெளிவிவகார அமைச்சர் தனியார்துறை பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
No comments:
Post a Comment