(செ.சுபதர்ஷனி)
இலங்கையில் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுபவை பேருந்துகள் அல்ல அவை லொறிகளாகும். லொறியின் உடல் பாகத்தைக் கொண்டு அவை வடிவமைக்கப்பட்டுள்ளது. டூரிஸ்ட் பஸ் என்பதே பேருந்து. பேருந்துகளின் இறக்குமதிக்கு அதிகளவான தீர்வை வரி அறவிப்படுவதால், பயணிகள் போக்குவரத்துக்கு லொறிகளை கொள்வனவு செய்வதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர், விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் சமத் தர்மரத்ன தெரிவித்தார்.
வீதி விபத்துக்கள் நிவாரணம் தொடர்பில் இலங்கை மருத்துவ சங்கத்தில் வெள்ளிக்கிழமை (16) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
விபத்துக்களை குறைப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கான முறையான திட்டம் ஒன்றையும், அதிகாரமிக்க தீர்மானங்களை முன்னெடுக்கக்கூடிய தேசிய மட்டத்திலான குழுவை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாட காலவகாசம் வழங்குமாறு இருமுறை தற்போதைய ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை வழங்கியுள்ளோம்.
ஏற்கனவே மார்ச் 6 ஆம் திகதி வழங்கிய கடித்துக்கு ஜனாதிபதி தரப்பினரிடமிருந்து எவ்வித பதில்களும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று வழங்கப்பட்டுள்ள கடித்துக்கும் அவ்வாறானதொரு நிலையே ஏற்படலாம். மருத்துவ சங்கத்தால் வழங்கப்படும் கடிதம் ஜனாதிபதியிடம் உரியவாறு சென்றடைகிறதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கத்தினர் விபத்துக்களை கட்டுப்படுத்த செயற்திறனான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். சுகாதார அமைச்சு, பொலிஸார் என சுமார் 80 க்கும் அதிகமான அமைச்சுகளும் பிரிவுகளும் இதனுடன் தொடர்புடையன. ஆகையால் தேசிய மட்டத்திலான வேலைத்திட்டம் ஒன்றே எமக்கு அவசியம்.
இலங்கையில் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுபவை பேருந்துகள் அல்ல அவை லொறிகளாகும். லொறியின் உடல் பாகத்தைக் கொண்டு அவை வடிவமைக்கப்பட்டுள்ளது. டூரிஸ்ட் பஸ் என்பதே பேருந்து. பேருந்துகளின் இறக்குமதிக்கு அதிகளவான தீர்வை வரி அறவிப்படுவதால், நாட்டில் உள்ளவர்கள் பயணிகள் போக்குவரத்துக்கு லொறிகளை கொள்வனவு செய்கின்றனர் என்றார்.
இதேவேளை இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சுரந்த பெரேரா தெரிவிக்கையில், நாட்டில் பதிவாகும் வீதி விபத்துக்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பொதுப் போக்குவரத்து வாகனங்களில் செல்வதற்கும் அஞ்ச வேண்டிய இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது.
அண்மையில் கொத்மலை பகுதியில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து பயணிகள் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்ததுடன் 25 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது மிகப்பெரிய உயிர் சேதமாகும்.
இவ்வாண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 975 பேர் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
கடந்த 10 வருட காலப்பகுதியில் வருடாந்தம் 2300 தொடக்கம் 2500 இடைப்பட்ட மரணங்கள் பதிவாகுவதை காணக் கூடியதாக உள்ளது.
அந்த வகையில் இதுவரை அண்ணளவாக 12 ஆயிரம் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. தொழிலுக்கு சென்றவர்கள் மீள வீடு திரும்புவார்களா? என நிச்சயமில்லாத நிலை உருவாகியுள்ளது என்றார்.
No comments:
Post a Comment