முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெனாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குறித்த இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது, இலங்கை விளையாட்டு சம்மேளனம் மூலம் சதொச ஊடாக 14,000 கரம் பலகைகள், 11,000 டாம் பலகைகளை கொள்வனவு செய்ததன் மூலம் அரசுக்கு ரூ. 53 மில்லியன் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந்தது.
அதற்கமைய, குறித்த வழக்கு இன்று (29) மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, முன்னாள் வர்த்தக அமைச்சர் நளின் பெனாண்டோவுக்கு 25 வருட கடூழிய சிறைத் தண்டனையும், முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பிரதிவாதிகள் தங்கள் பதவியின் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்ததன் மூலம் தவறான செயலைச் செய்துள்ளதாக, நீதிமன்றத்தில் தமது வாதங்களை முன்வைத்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்தார்.
இந்தத் தவறு காரணமாக, அரசாங்கம் ரூ. 53 மில்லியனுக்கும் அதிகமான மக்களிடமிருந்து வரியாக பெற்ற பணத்தை அரசாங்கம் இழந்துள்ளதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, இதுபோன்ற குற்றங்களைச் செய்யத் தயாராகி வருபவர்களுக்குப் பாடம் கற்பிக்கவும் மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆர்வலர்களை ஊக்குவிக்கவும் ஒரு சிறந்த தீர்ப்பை வெளியிடுமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தைக் கோரினார்.
முன்வைக்கப்பட்ட வாதங்களைப் பரிசீலித்த மஹேன் வீரமன் தலைமையிலான மூவுர் அடங்கிய மேல் நீதிமன்ற குழாம் குறித்த தீர்ப்பை வழங்கியது.
No comments:
Post a Comment