பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பதுளை நீதவான் நீதிமன்றம் இன்று (19) இவ்வுத்தரவை விடுத்துள்ளது.
அதற்கமைய, தலா ரூ. 10 இலட்சம் கொண்ட 2 சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 27ஆம் திகதி, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் சாமர் சம்பத் எம்.பி. கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்குவதற்காக மாகாண சபை ஊடாக வங்கியிலிருந்து ரூ. 10 இலட்சம் காசோலையை பெற்று, அதனை தனது தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்திய ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
ஊழல் தொடர்பான மூன்று தனித்தனி வழக்குகள் தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
அவை அவர் 2016 ஆம் ஆண்டு ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளாகும்.
மாகாணத்தில் உள்ள முன்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பாடசாலை புத்தகப்பைகள் வழங்குவதற்காக மூன்று அரச வங்கிகளிடமிருந்து நிதி கோரியிருந்தார்.
இரண்டு வங்கிகள், அவருக்கு ரூ. 1 மில்லியன் மற்றும் ரூ. 2.5 மில்லியன் வழங்கியிருந்தன, பின்னர் அவை அவரது தனிப்பட்ட அறக்கட்டளை கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளன.
மற்றைய அரச வங்கி அவரது கோரிக்கையை நிராகரித்ததை அடுத்து, குறித்த வங்கியிலிருந்த ஊவா மாகாண சபையின் நிலையான வைப்புத்கணக்கு பணத்தை அதன் முதிர்வுக்கு முன்னர் பெற்று பழிவாங்கும் வகையில் செயற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதன் மூலம் ரூ. 17.3 மில்லியனுக்கும் (ரூ. 173 இலட்சம்) அதிக நஷ்டத்தை/ வருமானத்தை ஊவா மாகாண சபை இழந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இது தொடர்பான இரு வழக்குகளில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் அவருக்கு பிணை வழங்கப்பட்டது. அதே நேரத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மூன்றாவது வழக்கில பதுளை நீதவான் நீதிமன்றத்தினால் தொடர்ந்தும் இன்றையதினம் (19) வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்படத்தக்கது.
No comments:
Post a Comment