(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
தேசிய மக்கள் சக்தியின் பெயரை 'தேசிய சலவை சக்தி' என்று மாற்றிக் கொண்டால் பொருத்தமாக இருக்கும். தேர்தலுக்கு முன்னர் ஊழல்வாதிகள் மற்றும் மாற்றுக் கொள்கையுடையவர்களை இணைத்துக் கொள்ளப்போவதில்லை என்றார்கள். ஆனால் தற்போது பல குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்கள். ஊழல்வாதிகளை சலவை செய்தா கட்சியில் இணைத்துக் கொள்கிறார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) நடைபெற்ற நிதி சட்ட கட்டளைகள் மற்றும் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பெருமளவிலான ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. எமது கட்சிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் இந்த உயரிய சபை ஊடாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆட்சியமைப்பது தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்.
ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியை போன்று பேசுகிறது. கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் அரசாங்கம் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது. மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருடன் ஒன்றிணைந்து செயற்பட்டவர்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு உள்ளாக்கப்பட்டவர்களுடனும் அரசாங்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகள் குளறுபடியானதாக காணப்படுகிறது. இதற்கு தேர்தல் முறைமை பிரதான காரணமாகும். இந்த சிக்கலுக்கு தீர்வு கண்டதன் பின்னர் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியபோதும் அரசாங்கம் அதனை கவனத்திற்கொள்ளவில்லை.
தேசிய மக்கள் சக்தியின் பெயரை 'தேசிய சலவை சக்தி' என்று மாற்றிக் கொண்டால் பொருத்தமாக இருக்கும். தேர்தலுக்கு முன்னர் ஊழல்வாதிகள் மற்றும் மாற்றுக் கொள்கையுடையவர்களை இணைத்துக் கொள்ளப்போவதில்லை என்றார்கள். ஆனால் தற்போது பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்கள். ஊழல்வாதிகளை சலவை செய்தா கட்சியில் இணைத்துக் கொள்கிறார்கள்.
கடந்த கால ஆட்சியாளர்கள் கள்ளர்கள் ஆட்சி, தற்போதைய ஆட்சி நல்லவர்கள் ஆட்சி என்றார்கள். கள்ளர்களின் ஆட்சியில் உப்பின் விலை 100 ரூபாவாக காணப்பட்டது. ஆனால் தற்போதைய நல்லவர்களின் ஆட்சியில் உப்பின் விலை 500 ரூபாவாக காணப்படுகிறது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் அதனை விடுத்து போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக் கொண்டிருப்பதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment