(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இடை நிறுத்தப்பட்டிருக்கும் மாணவர்களுக்கு அநீதி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள நடவடிக்கை எடுப்போம் என பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வெளிப்படுத்திய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
முஜிபுர் ரஹ்மான் தெரிவிக்கையில், கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டிருந்தது. இதன்போது சுமார் 456 மாணவர்களின் பெறுபேறுகளில் ஒரு சில பாடங்களுக்கான பெறுபேறு இடை நிறுத்தப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு காரணத்துக்காக அவ்வாறு செய்திருக்கலாம். என்றாலும் இந்த மாதம் 29ஆம் திகதிக்கு முன்னர் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்குமாறு உயர்கல்வி அமைச்சினால் அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் இடைநிறுத்தப்பட்டிருக்கும் பெறுபேறுகள் தொடர்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருக்கிறது. அந்த மாணவர்களை பரீட்சைகள் திணைக்களத்துக்கு அழைத்து நேர்முக விசாரணை ஒன்றும் நடத்தி இருக்கிறது. பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிப்பதற்கு இன்னும் குறுகிய காலமே இருக்கின்ற நிலையில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்த இடைநிறுத்தப்பட்டிருக்கும் பெறுபேறுகள் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது.
அதனால் கல்வி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் உடனடியாக இந்த விடயத்தில் தலையிட்டு, இந்த பெறுபேறுகளை உடனடியாக வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிப்பதற்கு இருக்கும் காலத்தை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கு பிரதமர் தொடர்ந்து பதிலளிக்கையில், கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ள மாணவர்களில், அந்த பிரச்சினையில் இருந்து விடுதலையாகும் மாணவர்களின் பெயர்கள் இன்று (நேற்று) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு பரீட்சை திணைக்களம் அறிவிக்கும். அதனால் மீள் திருத்தம் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலத்தையும் அவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருக்கிறது. அதனால் இந்த மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
No comments:
Post a Comment