இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்டி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் கடந்த 22 ஆம் திகதி வணிக வர்த்தக வளாகத்தில் கைது செய்யப்பட ருஷ்டி பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அத்தனகல்ல நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை (07) ஆஜர்படுத்திய நிலையில், அவரை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
காஸாவில் இடம்பெறும் அட்டூழியங்களுக்கு எதிராக, கொழும்பு, கொம்பனித் தெருவில் உள்ள சிடி சென்டர் எனும் பிரபல வர்த்தக கட்டிடத் தொகுதியின் ‘லொபி’ பகுதியில் இரு ஸ்டிக்கர்களை ஒட்டியதாக கூறப்படும் மொஹமட் ருஷ்டி கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
வெறுப்பூட்டும் விடயங்களை பிரசாரம் செய்தமைக்காக, குறித்த ஸ்டிக்கரை ஒட்டிய சம்பவத்தை மையப்படுத்தி பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் அவரைக் கைது செய்ததாகவும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரித்து வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் புத்திக மனதுங்க தெரிவித்திருந்தார்.
குறித்த இளைஞர், கொம்பனித்தெரு சிட்டி சென்டர் வர்த்தக கட்டிடத் தொகுதியில் உள்ள கடை ஒன்றில் சேவையாற்றும் நிலையிலேயே, பணி நிமித்தம் சென்றபோது அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
குறித்த கட்டிடத் தொகுதியின் லொபி பகுதியில் ‘ f… இஸ்ரேல்’ எனும் வாசகம் தரித்த ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளதாகவும், காஸாவில் இடம்பெறும் அட்டூழியங்களுக்கு எதிராக அவர் அதனை செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இது குறித்து பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களுக்கு அமைய, கொம்பனித்தெரு பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டு, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையிலேயே மொஹமட் ருஷ்டி இன்று திங்கட்கிழமை (07) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment